ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

சேனைக்கிழங்கு குழம்பு


                 சேனைக்கிழங்கு குழம்பு                           +++++++++++++++++++++++++++               தேவை :

--------------------------------
                    சேனைக்கிழங்கு துண்டுகள் ( தோல் நீக்கி) --- 1கப்,
                      சின்ன வெங்காயம்  ---- 10,
                       பூண்டு பற்கள் -----             6,
                       பச்சை மிளகாய்  -----          2,
                       தக்காளி  --------                      1, 
                        புளி ----------                             சின்ன எலுமிச்சை அளவு,
                         மஞ்சள் பொடி  ,மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி, சீரகப்பொடி  ,
                            கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, மல்லி, புதினா ,                                      உப்பு, எண்ணெய் ------தேவைக்கு,
                            முற்றிய தேங்காய் மூடி ------ 1.

    செய்முறை :

--------------------------------
                              சேனைக்கிழங்கு துண்டுகளை  மஞ்சள் பொடி, மோர் ,உப்பு கலந்த நீரில் போட்டு அரை வேக்காடு வேகவைத்து, நீர் வடித்து உலர விடவும். மிக்ஸி ஜாரில் தக்காளி துண்டுகளை அரைத்து, அத்துடன்  உரித்த வெங்காயம், பூண்டை ஒன்றிரண்டாக. உடைத்த பின் புதினா சேர்த்து சுற்றி  எடுக்கவும். 
                                    வாணலியில் சிறிது எண்ணெய் காயவைத்து, உலர்ந்த சேனைக்கிழங்கு துண்டுகளை மிதமான தணலில் பொரித்து எடுத்து வைக்கவும்.  அதே எண்ணெயில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து,  அரைத்த கலவை சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கி,  புளி கரைத்த நீர் விட்டு, மஞ்சள் பொடி, அரை டீஸ்பூன் மிளகாய் பொடி, ஒரு டீஸ்பூன் மல்லிப்பொடி, அரை டீஸ்பூன் சீரகப்பொடி, சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்க ஆரம்பித்ததும் பொரித்த கிழங்குத் துண்டுகள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதித்து குழம்பு வற்றியதும், தேங்காய் அரைத்து எடுத்த பாலைச் சேர்த்துப் பொங்கியதும் இறக்கிப் பரிமாறவும்.
                 சூடான சாதத்தோடு பிசைந்து சாப்பிட மிகுந்த சுவையாக. இருக்கும்.

கம்பு புட்டு


            

                             கம்பு புட்டு

                                                    *********************************

தேவை:

----------------------

                        உமி நீக்கிய கம்பு ------ 1கப்,

                       பொடித்த வெல்லம் ------ 3/4 கப்,

                         வெள்ளை எள்ளு ------  1/2 கப்,

                          தேங்காய்ப் பூ -------  2 டேபிள்ஸ்பூன்,

                             ஏலக்காய்  ------- 6 ,

                            நெய் -------- 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை :

-----------------------------

                             கம்பை வெறும் வாணலியில் வாசம் வர சிவக்க வறுத்து, மிக்ஸியில் நைசாகப் பொடித்தபின், உப்பு கலந்த நீர் சேர்த்து, உதிரியாகக்  கட்டிகளின்றிப்   பிசிறிப் பிசைந்து மூடி வைக்கவும். குறைந்தது அரை மணிக்குப் பின் ஆவியில் வேகவிடவும். வெல்லத்தைக் கொதிக்கும் நீரில் கரைத்து வடிகட்டி தேங்காய்ப் பூ சேர்த்து பாகு வைக்கவும்.  வெந்த புட்டை வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி, ஏலப்பொடி, முன்னதாக வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்த எள்ளு, நெய் சேர்த்து கலக்கி வெல்லப்பாகையும் சேர்த்து நன்கு கிளறி விடவும். அடுப்பில் வைக்க வேண்டாம்.

இந்த புட்டு மிகவும் சுவையானது. சத்தானது. செய்வதற்கு சுலபமானது. 

                                                          

                                              

தினை கஞ்சி


                            தினை கஞ்சி

                         --------------------------

செய்முறை :
-------------------
                  1 கப்  உமி நீக்கிய தினையோடு நாலு கப் நீரும், உரித்த பூண்டு பற்கள் நாலும் 
, உப்பும் சேர்த்து குக்கரில் போட்டு, ஒரு பிரஷர் வந்ததும் அடுப்பை குறைத்து, 3 நிமிடத்துக்குப் பின் அடுப்பை அணைத்து, பிரஷர் தணிந்ததும் திறந்து  குழைய வெந்திருக்கும் கலவையை மசித்து, தேவைப்பட்டால் நீர் விட்டு அடுப்பில் வைத்துக் கொதித்ததும், 1 கப் திக்கான தேங்காய்ப் பால் சேர்த்துப் பொங்கியதும் இறக்கவும்.

நார்ச்சத்து நிரம்பிய இந்த கஞ்சி சுவையானது. அனைவருக்கும் ஏற்றது. காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். 

சனி, 29 ஆகஸ்ட், 2020

ராகி கீரை வடை


                                                     ராகி கீரை வடை
                         ********************
 தேவை :
---------------
                முழு கேழ்வரகு (ராகி)  ------- 1கப்,
                 ஆய்ந்த முருங்கைக் கீரை  ---- 1 கைப்பிடி, 
                 பொடியாக நறுக்கிய வெங்காயம் -- 
                                                                     1 டேபிள்ஸ்பூன்,
                   பச்சை மிளகாய் ( துண்டுகளாக) ----- 2,
                     உப்பு,எண்ணெய்  ---- தேவைக்கு.
செய்முறை :
---------------------
                     கேழ்வரகை மிக்ஸியில் அரைத்து  நைசான மாவாக்கி, கீரை,வெங்காயம்,  பச்சை மிளகாய் , விரும்பினால் 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து மாவோடு கலக்கி  ,உப்பு கலந்த நீர் விட்டுப் பிசைந்து 1/4 மணி  நேரம் ஊறவிட்டபின், காய்ந்த எண்ணெயில் வடைகளாகத் தட்டிப்போட்டு, இருபுறமும் முறுகலாக வேகவிட்டு எடுக்கவும்.

சூடாக இந்த கிரிஸ்பி வடை சுவை  அள்ளும். கடையில் கிடைக்கும் மாவிலும் செய்யலாம். மொறுமொறுப்பு சற்று குறைவாக இருக்கும்.

         

                                           


     

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

காட்டு யானம் கஞ்சி

                   காட்டு யானம் கஞ்சி

                                  ++++++++++++++++++++++++++++++++++++++++++
செய்முறை :
-------------------
             காட்டு யானம் என்பது நமது பாரம்பரிய அரிசி. இந்த அரிசிச்சாதம் சாப்பிடுவோருக்கு  ஒரு காட்டு யானையைத்  தாங்கும் அளவுக்கு  உடம்பு வலுவாக இருக்குமாம். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்குமாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய்  காணாமலே போய் விடும் என்கிறார்கள்.

                ஒரு  கப் காட்டுயானம் அரிசியை நீர் விட்டுக் களைந்த பின்,  8 கப் நீர் சேர்த்து , குக்கரில் ஊறவிட்டு,
குறைந்தது 3 மணி நேரம் ஊறிய பின், உப்பு சேர்த்து பிரஷரில் வேகவிடவும். ஒரு பிரஷர் வந்ததும், அடுப்பைக் குறைத்து வைத்து 20 நிமிடங்கள் பொலிய விட்டு, அடுப்பை அணைக்கவும்.

வெந்த அரிசி அவல் போல மலர்ந்திருக்கும். சாதாரணமாக தேங்காய்ப்பூ, சர்க்கரை சேர்த்தோ, தித்திப்புக்குப் பதிலாக மிளகுத் தூள் போல விருப்பத்திற்கு ஏற்ப கலந்து ,இரவு  உணவாக திரவ நிலையில் சாப்பிடலாம். அல்லது,

சமைத்து இறக்கிய கஞ்சியில் நாலு ஆர்க்கு கறிவேப்பிலை போட்டுக் கலந்து மூடி வைத்து இரவெல்லாம் ஊறிய பின், மறுநாள் காலையில் நன்கு கரைத்து, விரும்பினால் மோர் சேர்த்து, நீராகாரமாக, காலை உணவாகச் சாப்பிடலாம். 

குறிப்பாக இந்த முறை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்ததாகும்.  அனைவருக்கும் ஜீரணசக்தியை அதிகரிக்கும். 

இந்த சமையலில் முக்கியமான ஒன்று என்னவெனில், இந்த காட்டு யானம் கஞ்சியை மண் கலயத்தில் சமைப்பது கூடுதல் சிறப்பு. நற்பலன்கள் மிக அதிகம்! 
 

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

நெய் மாலாடு


                            நெய் மாலாடு

                                                  **********************************************

தேவை :
--------------
             முழு கோதுமை      ----   1 கப்,
                     பாசிப்பருப்பு         -------  1/2 கப்,
               தினை                     -------    1/2 கப்,
              சர்க்கரை                 ------       2 கப்,
               வெண்ணெய்       -------     250 கிராம் 
செய்முறை :
--------------------
                  கோதுமை, பாசிப்பருப்பு, தினை ஆகியவற்றை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஆறவிட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். சர்க்கரையையும் நைசாக அரைத்து அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்கவும்.
விரும்பினால் முந்திரிப் பருப்பு, ஏலப்பொடி சேர்க்கலாம். 
வெண்ணெயை நெய்யாக உருக்கி மாவில் கலந்து, கை பொறுக்கும் சூட்டில் இறுகலான உருண்டைகளாகப் பிடிக்கவும்.( சூடான நெய்தான் நல்ல பக்குவம் கொடுக்கும் என்பதாலேயே வெண்ணெயை உருக்கிய
சூட்டோடு கலந்தால்  நல்லது)
இந்த மாலாடு சுவையானது. சத்து நிறைந்தது.  சில நாட்கள்  ஆனாலும் கெட்டுப் போகாது.



                 
     


செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

கவுனி கஞ்சி

                               கவுனி கஞ்சி

                             *******************

    செய்முறை :

                     1/2 கப்  கவுனி அரிசியை  ( கறுப்பு அரிசி) மிக்ஸியில் குருணையாகப் பொடித்து குக்கரில் போட்டு, 4 கப் நீரும் உப்பும் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்து,  ஒரு பிரஷர் வந்ததும், அடுப்பைக் குறைத்து,
6 ,7, நிமிடங்கள் பின்பு அடுப்பை அணைத்து, பிரஷர் தணிந்ததும் திறந்து கஞ்சி கெட்டியாக இருந்தால் வெந்நீர் கொதிக்க வைத்து, தேவைப்படும் அளவிற்கு ஊற்றி,ஆற விட்டு  பருகலாம். 

தொட்டுக்கொள்ள வேண்டுமென்றால் காரத்துவையல்கள், ஊறுகாய், மோர்மிளகாய் போன்றவற்றில் ஏதோ ஒன்று எடுத்துக் கொள்ளலாம்.

கவுனி அரிசி மாவுச்சத்து  குறைவாகவும் ,நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் அனைவருக்கும் ஏற்றது. உடலுக்கு தீங்கு செய்யாதது.எளிமையான உணவு. எளிதில் ஜீரணமாவது.
இந்த அற்புதமான அரிசியில் பலவகை பதார்த்தங்கள் தயாரிக்கலாம். 

 

 

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

சுண்டைக்காய் காரக் குழம்பு

     

                 சுண்டைக்காய் காரக் குழம்பு

        *************************************

             தேவை:

                          ஆய்ந்த சுண்டைக்காய் - 2 கப்,

                                     சின்ன வெங்காயம் -     1 கைப்பிடி,

                                     பூண்டு பற்கள் ------ 6,

                                        தக்காளி        ------  2,

                                         புளி   -----   சின்ன எலுமிச்சை அளவு

                                           மிளகாய்த்தூள் --- 3/4. டீஸ்பூன்,

                                          மல்லித்தூள் ------   1 டீஸ்பூன்,

                                           மஞ்சள் தூள்   ---- 1/2 டீஸ்பூன்,

                                           கெட்டித்தயிர் ------ 1 டேபிள்ஸ்பூன்,

                                           உப்பு,எண்ணெய் --- தேவைக்கு,

              தாளிக்க: கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை

            செய்முறை :

                             நன்கு அலசி நீர் வடித்த சுண்டைக்காயை மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து எண்ணெய் விட்டு வதக்கி வைக்கவும்.  உரித்த வெங்காயம், பூண்டு பற்கள் தக்காளி துண்டுகளை மிக்ஸி ஜாரில் நீர் சேர்க்காமல் ஒன்றிரண்டாகச் சுற்றி எடுத்து, வாணலியில் எண்ணெய் காயவைத்து, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பொடித்த கலவை சேர்த்து நன்கு வாசம் வர வதக்கி சுருளும்  போது வதங்கிய சுண்டைக்காயோடு  சேர்த்து புளி நீர் விட்டு மிளகாய்த்தூள் ,மல்லித்தூள், 1/2 ஸ்பூன் சீரகத்தூள்,மல்லித்தழை ,போதுமான நீர் சேர்த்துக் கொதிக்கும் போது, ஒரு டீஸ்பூன் வெல்லத்தூள், தயிர் சேர்த்து, குழம்பு  நல்ல நிறமும், மணமுமாகத் திக்காகி, எண்ணெய் பிரியும் போது இறக்கி சூடான சாதத்தோடு பிசைந்து சாப்பிட மிகுந்த சுவையாக இருக்கும். 

      வித்தியாசமான பக்குவத்தில் அசத்தும் காரக்குழம்பு. 

          

                         

                  

         

சனி, 22 ஆகஸ்ட், 2020

கோவா கேசரி

             கோவா கேசரி 
           *********************
தேவை 
----------------
வெள்ளை ரவை ------ 1கப்,
பால் ------ 3/4 லிட்டர்,
சர்க்கரை  ---- 2 கப்,
நெய் ----  200 கிராம் ,
கடலை மாவு -- 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் --- 6 ,
முந்திரி ,திராட்சை ---- தலா 20 கிராம்.

செய்முறை :
----------------------
1 கப் காய்ச்சிய பாலுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, ரவையைச் சேர்த்து கட்டி விழாமல் கரைத்து வைத்து 1 மணி நேரம் ஊறவிடவும்.

மீதி பாலை சுண்ட காய்ச்சி இறக்கவும். கோவா போல் திக்காக இருக்கட்டும்.

ஊறிய ரவையை அடுப்பில் வைத்துக் கிண்டவும்.இன்னொரு அடுப்பில் கடலைமாவோடு நெய் சேர்த்துத் தளர்ச்சியாக வறுத்து ரவையோடு சேர்க்கவும்.  காய்ச்சிய பால்கோவாவைச் சேர்த்து, ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.  நெய் சிறிது சிறிதாகச் சேர்த்து ,ஏலப்பொடி போட்டு சுருண்டு, நெய் பிரிய ஆரம்பித்ததும் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும்.