செவ்வாய், 27 மே, 2014

போண்டா மோர்க்குழம்பு

போண்டா மோர்க்குழம்பு



தேவையானவை:
வெள்ளை உளுத்தம்பருப்பு- 1 கப்
கடலைப்பருப்பு, பச்சரிசி- தலா ½ டீஸ்பூன்
தேங்காய் மூடி-1
தயிர்-1 கப்
பச்சை மிளகாய்-8
சீரகம்-1/2 டீஸ்பூன்
இஞ்சி- சின்ன துண்டு, மஞ்சள் பொடி- ¼ டீஸ்பூன்,  பெருங்காயப்பவுடர்- தேவைக்கேற்ப, மல்லித்தழை- சிறிதளவு,  எண்ணெய்- தேவைக்கேற்ப
தாளிக்க: கடுகு, உளுத்தம்பருப்பு- தலா ¼ டீஸ்பூன், வரமிளகாய்-4, கறிவேப்பிலை- சிறிது.
செய்முறை: வெள்ளை உளுத்தம்பருப்பை முக்கால் மணி நேரம் ஊற வைத்து  நீர் வடித்து  நாலு பச்சை மிளகாய், இஞ்சி, பெருங்காயம், உப்பு சேர்த்து மாவாக அரைக்கவும், அவ்வப்போது நீர் தெளித்து பஞ்சாக அரைத்தெடுக்கவும்.
அரைமணி நேரம் ஊறிய கடலைப்பருப்பு, பச்சரிசியோடு தேங்காய்ப்பூ , சீரகம்,  நாலு பச்சை மிளகாய் சேர்த்து  நைசாக அரைத்தெடுக்கவும். விரும்பினால் நாலு பூண்டு பல்லும் இந்த மசாலாவோடு சேர்த்து அரைக்கலாம்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து தாளிக்கும் பொருட்களை தாளித்து மசாலாவை சேர்த்துப் பச்சை வாசனை போக வதக்கவும். தண்ணீர், உப்பு, பெருங்காயப்பவுடர் , மஞ்சள் பொடி சேர்த்து கொதிக்க விடவும். இன்னொரு பர்னரில் எண்ணெய் காயவைத்து உளுந்தம் மாவை சிறு உருண்டைகளாக உருட்டிப் போட்டு போண்டாக்களாகப் பொறித்தெடுக்கவும். விரும்பினால் போண்டாக்களாக பொரித்தெடுப்பதற்கு முன் பொடியாக நறுக்கிய வெங்காயம் சிறிது மாவில் சேர்த்து பிசையலாம்.
கொதித்துக்கொண்டிருக்கும் குழம்பில் தயிரைப் போட்டுக் கிளறி பொங்கியதும் மல்லித்தழை தூவி அடுப்பை அணைக்கவும்.பொரித்தெடுத்த போண்டாக்களை சுட சுடச் சூடான மோர்க்குழம்பில் போட்டு ஊறிய பின் பரிமாறவும்.

முருங்கைக்காய் ரசம்

முருங்கைக்காய்  ரசம் 


 தேவையானவை;

       முற்றிய  முருங்கைக்காய்- 4,
     
         தக்காளி- 4,  இஞ்சி- சின்ன  துண்டு,

          பூண்டு- 4 பல், சின்ன  வெங்காயம்- 4,

           பச்சை  மிளகாய்- 2, மிளகு, சீரகம்- தலா- 1 டீஸ்பூன்,

            நறுக்கிய  மல்லி, புதினா- தலா- 1/4 கப் 
       
             உப்பு, எண்ணெய் தேவைக்கு,

  செய்முறை;
 
       முருங்கைக்  காய்களைத்  துண்டுகளாக  நறுக்கி  ஒரு  லிட்டர்  தண்ணீரோடு  குக்கரில்  போட்டு  அடுப்பில்  வைக்கவும். ஒரு  பிரஷர்  வந்ததும் அடுப்பைக்  குறைத்து  ஐந்து  நிமிடங்களுக்குப்  பின்  அடுப்பை  அணைக்கவும். தக்காளிகளைத்  துண்டுகளாக்கி  மிக்சி  ஜாரில்  போட்டு  அரைக்கவும்.இஞ்சி, பூண்டை  விழுதாக அரைத்து, சின்ன  வெங்காயத்தை  அத்துடன்  சேர்த்துப்  பொடிக்கவும்.
        குக்கரைத்  திறந்து  வெந்த  காய்களை  மட்டும்  தனியே  எடுத்துக்  கசக்கிப்  பிழிந்து  சக்கை  சதைப்  பகுதியைக்  காய் வெந்த  நீருடன்  சேர்க்கவும.
வாணலியில்  எண்ணெய்  காயவைத்துச்  சிறிது  கடுகு  தாளித்து  அரைத்த  அனைத்துப் பொருட்களையும்  சேர்த்துப்  பச்சை வாசனை  போகும் வர வரை  வதக்கவும்.  மல்லி, புதினா  சேர்க்கவுமமுருங்கைக்காய்  வெந்த  நீரைச்  சேர்க்கவும். எல்லாம்  ஒன்றாகச்  சில  நிமிடங்கள்  கொதிக்க விட்டு இறக்கவும். 

            இந்த  ரசத்தை  வெறுமெனே  சூப்பாகப்  பருகலாம்.சூடான  சாதத்தோடு  பிசைந்து  சாப்பிடலாம்.இனி  முற்றலாக  முருங்கைக்காய்  வாங்கி வருத்தப்  படாதீர்கள  சுவைமிக்க  அருமையான  ரசம்  தயாரிக்கலாம்  என்று  சந்தோஷப்  படுங்கள்.

அரைத்து விட்ட ரசம்

அரைத்து விட்ட  ரசம் 


தேவையானவை;

          புளி- சின்ன  எலுமிச்சையளவு, தக்காளி- 2,

            வரமிளகாய்- 4,    பூண்டு- 4 பல்,

           மிளகு, சீரகம்- தலா- 1 டீஸ்பூன்,

         கட்டிப்பெருங்காயம்- சின்னத்துண்டு,

         நறுக்கிய  மல்லித்தழை- 1 டேபிள்ஸ்பூன்,

        கறிவேப்பிலை- 1 ஈர்க்கு,

       உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

  தாளிக்க;  கடுகு- 1/4 டீஸ்பூன் 

செய்முறை;

    புளியை  ஊறவைத்துக்  கரைத்து  சக்கை  நீக்கி  வைக்கவும். கட்டிப்  பெருங்காயத்தைச்  சிறிது  எண்ணெய் விட்டுப்  பொரித்துத்  தூளாக்கிப்  புளிக்  கரைசலில்  சேர்க்கவும். துண்டுகளாக  நறுக்கிய  தக்காளிகளுடன், பூண்டு, மிளகு, சீரகம் , ஆகியவற்றை  மிக்ஸி ஜாரில்  போட்டு  அரைக்கவும், கொர கொரப்பாக  மசிந்த  நிலையில்  வரமிளகாய்  சேர்த்து  இரண்டு சுற்று  சுற்றி  எடுக்கவும். அனைத்தையும்  புளிநீரில்  சேர்த்து  உப்புபோடவும், இந்த 
அளவு  பொருட்களுக்கு  அரை லிட்டருக்கு  மேல்  ரசம்  தயாரிக்க  முடியும்  என்பதால் புளிப்பின்  தன்மைக்கு  ஏற்ப  தண்ணீர்  சேர்த்துக்  கலக்கி  அடுப்பில்  வைக்கவும்.கறிவேப்பிலை, மல்லித்தழை  சேர்க்கவும்.

          எல்லாம்  ஒன்றாகப்  பொங்கும்போது  கடுகு  தாளித்துக்  கொட்டி  இறக்கவும். சிறிது  பச்சைத்  தண்ணீர்  தெளித்துக்  கிளறிப்  பரிமாறவும்.

வாழைப்பூ, கோஸ் கூட்டு

வாழைப்பூ, கோஸ்  கூட்டு 


தேவையானவை;

        பொடியாக  நறுக்கிய  வாழைப்பூ- 1 கப்,

        பொடியாக  நறுக்கிய  கோஸ்- 1 கப்,

        பாசிபருப்பு- 1/2 கப்,

         பச்சை  மிளகாய்- 4,

        மஞ்சள்பொடி- 1/2 டீஸ்பூன்,

         சீரகப்பொடி- 1/2 டீஸ்பூன்,

          தேங்காய்ப்பூ- 1 டேபிள்ஸ்பூன்,

         மல்லிதழை- சிறிது,

          உப்பு, எண்ணெய் -தேவைக்கு,

     தாளிக்க; கடுகு, உளுந்தம்  பருப்பு  - தலா  1/4 டீஸ்பூன், கறிவேப்பிலை- சிறிது 

 செய்முறை;

         பாசிப்பருப்பை  வெந்நீரில்  மூழ்கும்  வரைப்  போட்டு  ஊறவிடவும்.  அடுப்பில்  வைக்க  வேண்டாம். வாழைப்பூவை  மஞ்சள்பொடியும், மோரும் கலந்த  நீரில்  அலசிப்  பிழிந்து உப்பும்  நீரும்  சேர்த்து  வேகவிடவும். இன்னொரு  பர்னரில்  வாணலி வைத்துக்  காய்ந்த  எண்ணெயில்  தாளிக்கும் பொருட்கள்  தாளித்துப்  பச்சைமிளகாயுடன்  விரும்பினால்  பொடியாக  நறுக்கிய  வெங்காயம்  சிறிது  சேர்த்து  வதக்கியபின்  கோஸ்  சேர்த்துக்  கிளறி
 ஊறிய  பாசிபருப்பு, மஞ்சள்பொடி, உப்பு, மல்லித்தழை  சேர்த்துக்  கிளறவும்.  வெந்து  கொண்டிருக்கும்  வாழைப்பூவைச் சேர்க்கவும். 

          எல்லாம் நன்கு வெந்து  ஓன்று  கூடியிருக்கும் கூட்டிச்  சற்றுத்  தளர்ச்சியாக  இறக்கி  மல்லித்தழை  தூவிப்  பரிமாறவும்,

வாழைத்தண்டு உசிலி

 வாழைத்தண்டு  உசிலி 


 தேவையானவை;

    பொடியாக  நறுக்கிய  வாழைத்தண்டு- 2 கப்,

     துவரம் பருப்பு- 1/2 கப்,  கடலைப்பருப்பு- 1/4,

      பச்சை மிளகாய்- 4, பெரிய  வெங்காயம்- 1,
      
     சீரகம்- 1 டீஸ்பூன்,  பெருங்காயப்பவுடர்- 1/2 டீஸ்பூன்,

     மல்லி, புதினா- தலா  சிறிது,

      உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

தாளிக்க-கடுகு, உளுந்தம்பருப்பு- தலா  1/4 டீஸ்பூன், வரமிளகாய்- 2

 செய்முறை;

          கடலைப்  பருப்பையும்  துவரம்பருப்பையும் ஒன்றாக  ஊறவைக்கவும். நன்கு  ஊறியபின்  நீர்  வடித்து  பச்சை  மிளகாய், சீரகம், பெருங்காயம்,

   உப்பு  ஆகியவற்றைச்  சேர்த்துக்  கொகொரப்பாக  அரைத்து சிறு  வடைகள்  போல்  தட்டித்  துணிபோட்ட  இட்லிதட்டில்  வைத்து  ஆவியில்  வேக 

 வைத்து  எடுத்து  உதிர்த்து  வைக்கவும்,

          வாணலியில்  எண்ணெய்  காயவைத்துத்  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்துப்  பொடியாக  வெங்காயத்தை  நறுக்கிப்  போட்டு  வதக்கி, சுத்தப்

 படுத்திய  வாழைத்தண்டைப்  போட்டு  உப்பு, மஞ்சள்பொடி  சேர்த்து  சிறிது  நீர்  விட்டுக் கிளறி  மூடி  வைத்து  வேகவிடவும். பொடியாக  நறுக்கிய 

மல்லி, புதினா  சேர்த்துக்  கிளறி விடவும். நன்கு  வெந்து  நீர்  வற்றியவுடன்  உதிர்த்து  வைத்திருக்கும்  பருப்புக்  கலவையைச்  சேர்த்து  நன்கு 

கிளறிப்  பரிமாறவும்.

           இந்த  உசிலி  சத்துக்களும், சுவையும்  நிரம்பியது.  அனைவருக்கும்  ஏற்றது.

கேரட் சுய்யம்

கேரட்  சுய்யம் 


தேவையானவை;

           கடலைப்பருப்பு- 1 கப், பெரிய  கேரட்- 2;

           பொடித்த  வெல்லம்- 3/4 கப்,

          தேங்காய்ப்பூ- 1 டேபிள்ஸ்பூன்,

        மைதா- 1 கப்,  அரிசிமாவு- 1/4 கப்,

         ஏலக்காய்- 5, 

          உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

  
செய்முறை;
  
      கடலைப்பருப்பை  மூழ்கும்  அளவுக்கு  மேல்  நீர்  விட்டு  குழையாமல்  மலர  வேகவிட்டு  நீர்  வடித்து  உலர்த்தியபின்  மிக்ஸியில்  தூளாகப் பொடிக்கவும். கொதித்த  நீரில்  கரைத்து  வடிகட்டிய  வெல்லநீருடன்  கேரட்  துருவல்  தேங்காய்ப்பூ, ஏலப்பொடி  சேர்த்து  அடுப்பில்  வைத்துக்  கிளறவும். எல்லாம்  ஒன்றாகித்  திரண்டு  வரும்போது  கடலைப் பருப்புப்  பொடி  சேர்த்துக்  பாத்திரத்தில்  ஒட்டாத  நிலை  வந்ததும்  இறக்கவும்.

       மைதாமாவு, அரிசிமாவு  இரண்டையும்  ஒன்றாக்கி  உப்பும்  நீரும  சேர்த்துத்  தோசைமாவு  பதத்திற்குக்  கரைக்கவும். வாணலியில்  எண்ணெய் காயவைத்து  கடலைப் பருப்பு , கேரட்  பூர்ணதைச்  சிறு  உருண்டைகளாக  எடுத்துக்  கரைத்த  மாவில்  தோய்த்துப்  போட்டு  மிதமான  தணலில்  நிதானமாகத்  திருப்பிப்  போட்டு  வேகவைத்து  எடுக்கவும்.

            சுவை  மிகுந்த  இந்தப்  பதார்த்தத்தைத்  தயாரிப்பதும்  எளிதுதான்.  
                           வைக்கவும்.

கேரட் போளி

 கேரட் போளி   


தேவையானவை;


     கடலைப்பருப்பு-- 1 கப் , பெரிய  கேரட்- 2, 

    பொடித்த  வெல்லம்- 1  கப், 

   தேங்காய்ப்பூ- 1 டேபிள்ஸ்பூன்- 

    மைதா- 1/2 கப்,

    ஏலக்காய்- 5,
    
    மஞ்சள்பொடி, உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

செய்முறை;

       கடலைப்பருப்பை  மூழ்கும்  அளவுக்கு  மேல்  நீரில்  போட்டுக்  குழையாமல்  மலர  வேகவிட்டு  நீர்வ டித்து  உலரவிட்டு   மிக்ஸியில்  தூளாகப் 

    பொடித்து  வைக்கவும். கேரட்டைத்  துருவி  சிறிது  நீர் விட்டு  ஒரு நிமிடம்  வேகவிட்டு  எடுக்கவும்.மைதாமாவுடன்  உப்பு, மஞ்சள்பொடி , இரண்டு  டேபிள்ஸ்பூன்  நல்லெண்ணெய்  சேர்த்து  நன்கு  கலக்கவும். சிறிது  நீர்  விட்டு சப்பாத்தி  மாவைக் காட்டிலும்  சற்று இளக்கமாகப் பிசைந்து  மேலும்  சிறிது  எண்ணெயை  மாவின்  மேலாக  ஊற்றி  மூடிவைத்து  சுமார்  இரண்டு மணிநேரம்  ஊறவிடவும்.

          கொதித்த  நீரில்  கரைத்து  வடிகட்டிய வெல்ல  நீருடன்  கேரட், தேங்காய்ப்பூ  சேர்த்து  அடுப்பில்  வைக்கவும். ஏலப்பொடி  சேர்த்து  எல்லாம்   ஒன்றாகத்  திரளும்போது  கடலைப்பருப்புப்  பொடியைச்  சேர்த்துக்  நீர்  வற்றிக்  கெட்டியானதும்  இறக்கவும்.  வாழையிலையில்  எண்ணெய் தடவிச்  சிறிது  மைதாவை  வைத்துப்  பரப்பி  விரல்களினால்  தட்டி  சிறு  உருண்டை  பூர்ணம்  நடுவில்  வைத்து  மூடி  அதிகப்படியாக  இருக்கும் 
 மைதாவை  எடுத்தபின்  இலையில்  வட்டமாகதட்டி  காய்ந்த  தோசைக்கல்லில்  போட்டு  சுற்றிலும்  எண்ணெய்விட்டுத்  திருப்பிப் போட்டு  இரண்டு கொப்புளம்  போல்  பூரித்து  வேகும்  வகையில்  அடுப்பைக்  கூட்டிக்  குறைத்து  எரியவிட்டு எடுக்கவும்.

         பரிமாறும்போது  மேலே  சிறிது  நெய்  விடவும். இந்தப்  போளியின்  சுவைக்கு  மயங்காதார்  யாரும்  இருக்க  முடியாது.

வரகு ஆப்பம் + தேங்காய்ச் சட்னி

வரகு  ஆப்பம்  + தேங்காய்ச்  சட்னி 


தேவையானவை;

       வரகு  அரிசி- 1 கப் , புழுங்கலரிசி- 1/2 க ப் , 

     வெள்ளை  உளுந்தம்  பருப்பு- 1 டேபிள்ஸ்பூன்,

     வெந்தயம்- 1 டீஸ்பூன்,   தேங்காய்- 1 மூடி,

     உப்பு, எண்ணெய்- தேவைக்கு  

சட்னிக்குத்  தேவையானவை-

     தேங்காய்- 1 மூடி, பொட்டுக்  கடலை- 2 டேபிள்ஸ்பூன்,

     பச்சைமிளகாய்- 4, சின்னவெங்காயம்- 6

     கடுகு, உளுந்தம்பருப்பு- தலா  1/4 டீஸ்பூன்,

     கறிவேப்பிலை- சிறிது,

செய்முறை 

     புழுங்கலரிசி, உளுந்தம்பருப்பு, வெந்தயம்  ஆகியவற்றை  ஒன்றாக  ஊறவைக்கவும். வரகைத்  தனியாக  ஊறவைக்கவும். ஊறிய  புழுங்கலரிசி  கல வையைத்  தேங்காய், உப்பு  சேர்த்து  நீர் விட்டு  அரைக்கவும். முக்கால்  பதம்  மசிந்ததும் வரகு அரிசி  சேர்த்து  தோசைமாவு  பதத்துக்கு  அரைத்து எடுத்து  நான்குமணி  நேரம்  புளிக்க வைத்தபின்  நீர்விட்டுக்  கரைத்து   காய்ந்த  ஆப்பச்சட்டியில்  சுற்றிச் சுழற்றி  ஊற்றி  மூடி  போட்டு  வேகவைத்து    எடுத்துத்  தேங்காய்ச் சட்னியுடன்  பரிமாறவும்.

           தேங்காய்ப்பூ , பொட்டுக்கடலை, பச்சைமிளகாய், இஞ்சி, உப்பு  சேர்த்து  நீர்விட்டுச்  சட்னியாக  அரைத்து  எடுக்கவும். காய்ந்த  எண்ணெயில்  கடுகு , உளுத்தம்பருப்பு   கறிவேப்பிலை  தாளித்து  பொடியாக  நறுக்கிய  சின்ன  வெங்காயம்   சேர்த்து  வதக்கிச் சட்னியில் கொட்டிக் கிளறி  விடவும். சுவைமிக்க  மேலும்  சுவையாக்கும்  இந்த  வித்தியாசச்  சட்னி. 

தேங்காய் தித்திப்பு ஆப்பம்

தேங்காய்  தித்திப்பு  ஆப்பம் 


தேவையானவை;
  
          பச்சரிசி- 2 கப்,

         வெள்ளை உளுந்தம்பருப்பு- 1 கைப்பிடி,

          வெந்தயம்- 1 டீஸ்பூன்,

          தேங்காய்- 1 மூடி,

        சர்க்கரை- 1 கப்,

       ஏலக்காய்  5

        உப்பு, எண்ணெய்  -தேவைக்கு,

 செய்முறை;

      பச்சரிசி, உளுந்தம்பருப்பு, வெந்தயம்  ஆகியவற்றை  ஒன்றாக  இரண்டு  மணி நேரம்  ஊறவைத்துக்  களைந்து  நீர்  வடித்து , தேங்காய்ப்பூ, உப்பு, நீர், சேர்த்துத்  தோசைமாவு  பதத்துக்கு  அரைத்து  எடுத்து  நான்கு  மணி  நேரம்  புளிக்க  விடவும்.
     
         சர்க்கரையைப்  பொடியாக்கி  ஏலப்பொடி  சேர்த்துக்  கலக்கவும். நான்ஸ்டிக்  ஆப்பச்  சட்டியைக்  காயவைத்துக்  கரண்டியால்  கரைத்த  மாவைச் 
 சுற்றிச்  சுழற்றி  ஊற்றி  மேல்புறத்தில்  சர்க்கரைப்பொடியைச்  சுற்றிலும்  தூவி  மூடிவைத்து  மிதமான  தணலில்  வேகவிட்டு  எடுக்கவும்.

          இந்த  ஆப்பம்  மிகவும்  சுவையானது. சாப்பிட  அடம்  பிடிக்கும்  குழந்தைகளும்  விரும்பிச்  சாப்பிடுவர்.

வெல்ல ஆப்பம்

 வெல்ல  ஆப்பம் 



தேவையானவை;
          
            பச்சரிசி- 2 கப்,

            வெள்ளை  உளுந்தம்பருப்பு- 1 கைப்பிடி,

             தேங்காய்மூடி- 1,

             பொடித்த  வெல்லம்- 1 கப்,

              ஏலக்காய்- 4,

             உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

   செய்முறை ;

       பச்சரிசி, உளுத்தம்பருப்பு,வெந்தயம்  ஆகியவற்றை  இரண்டு  மணிநேரம்  ஊறவைத்துக்  களைந்து  நீர்  வடித்து  உப்பு, தேங்காய்ப்பூ  நீர்  சேர்த்துத் தோசைமாவு  பதத்துக்கு  அரைத்து  எடுக்கவும். நான்கு  மணி  நேரம்  புளித்தபின்  கொதித்த  நீரில்  கரைத்து  வடிகட்டிய  வெல்ல  நீரைச்  சற்றுத் திக்  காகும் வரைக்  கொதிக்கவிட்டு  சிறிது  நேரம்  ஆறியபின்  மாவோடு  சேர்த்து  நன்கு கலக்கவும். தேவைப்பட்டால்  சிறிது  நீர்  சேர்த்துக்  கலக்கவும்.
 ஏலப்பொடி  சேர்த்துக்  கரைக்கவும்.

        நான்ஸ்டிக்  ஆப்பச்  சட்டியைக்  காயவைத்து  கரண்டியினால்  மாவை  ஊற்றிச்  சுற்றிச்  சுழற்றி  விட்டு  மூடி  வைத்து   மிதமான  தணலில்  வேக  விட்டு  நிதானமாக  எடுக்கவும். இந்த  ஆப்பம்  மிகவும்  சுவையானது.

தேங்காய்ப்பால் ஆப்பம்

தேங்காய்ப்பால்  ஆப்பம்


தேவையானவை;

               பச்சரிசி- 2 கப் 
              
               வெள்ளை  உளுந்தம்பருப்பு- 1 கைப்பிடி,

               வெந்தயம்- 1 டீஸ்பூன்,

                முற்றிய  தேங்காய்- 1,

                சர்க்கரை- 50 கிராம்,

               ஏலக்காய்- 5,

               உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

  செய்முறை;

      பச்சரிசி, உளுத்தம்பருப்பு, வெந்தயம்  ஆகியவற்றை  ஒன்றாக  ஊறவைக்கவும் . இரண்டு  மணி  நேரம்  ஊறியபின்  களைந்து  நீர்  வடித்துத்  தோசை மாவுபோல் அரைக்கவும்.விரும்பினால்  இரண்டு  டேபிள்ஸ்பூன்  தேங்காய்ப்பூ  சேர்த்தும்  அரைக்கலாம். அரைத்த  மாவை  நான்கு  மணி நேரம்  புளிக்கவிட்டு  நீர்விட்டுக்  கரைத்து  காய்ந்த  நான்ஸ்டிக்  ஆப்பச் சட்டியில் சுற்றிச்  சுழற்றி  ஊற்றி மூடி போட்டு  மிதமான  தணலில்  வேக 
 விட்டு  எடுக்கவும் 

         தேங்காயை  அரைத்து  எடுத்த  திக்கான  பாலில்  சர்க்கரை, ஏலப்பொடி  கலந்து  அடுப்பில்  ஒரு  நிமிடம்  வைத்துச்  சூடாக்கி  எடுத்து  ஆப்பத்தின்   
  மீது  ஊற்றிப்  பரிமாறவும்.