புதன், 30 ஏப்ரல், 2014

தினை கேரட் தித்திப்பு அடை

தினை  கேரட்  தித்திப்பு  அடை


தேவையானவை;

            தினை - 1 கப்,

             கேரட்- 100 கிராம்,

              பொடித்த  வெல்லம் - 3/4 கப்,

              தேங்காய்ப் பூ  - 1 டேபிள்  ஸ்பூன் 

            ஏலக்காய்- 5

  செய்முறை;

        தினையை  நீர்விட்டுக்  களைந்து  நீர்  வடித்து  நமக்கவிடவும். நன்கு  நமத்ததும்

 மிக்ஸியில்  மாவாக அரைத்து  எடுக்கவும்.வெல்லத்தைக்  கொதித்த  நீரில்  கரைத்து  வடிகட்டி

கேரட்  துருவல், தேங்காய்ப் பூ, சேர்த்து  அடுப்பில் வைத்துக்  கிளறவும். ஏலப்பொடி  சேர்த்து

எல்லாம்  ஒன்றானதும்  இறக்கித்  தினை  மாவோடு  சேர்த்துப் பிசைந்து  சிறு  அடைகளாகத்

தட்டி  துணி  போட்ட  இட்லித்  தட்டில்  வைத்து  ஆவியில்  வேகவைத்து 

எடுக்கவும்.சுவை  மிக்க  இந்த  அடையைச்  செய்வது  சுலபம்.  சிறியவர்  முதல்  பெரியவர் 

 வரை  அனைவருக்கும் ஏற்றது.

வயலட் கேபேஜ் பொரியல்

வயலட்  கேபேஜ்  பொரியல்


 தேவையானவை;

       வயலட்  கேபேஜ்- 1/4 கிலோ,

     கடலைப் பருப்பு- 1/4 கப்,

     பெரிய வெங்காயம்- 1,பச்சை மிளகாய்- 4,

       தேங்காய்ப்பூ- 1 டேபிள்ஸ்பூன்,

      மஞ்சள்பொடி, உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

 தாளிக்க- கடுகு, உளுத்தம்பருப்பு- தலா-1/4 டீஸ்பூன்,

                   கறிவேப்பிலை-  1 ஈர்க்கு,

செய்முறை;

        கடலைப்பருப்பை  மஞ்சள்பொடியுடன்  நீரில்  போட்டுக்  குழையாமல்  மலர வேகவைத்து
 
 இறக்கி நீர்  வடித்து    வைக்கவும்.வயலட்  கேபேஜை  பொடியாக  நறுக்கிச்  சுத்தப்படுத்தவும். 

வாணலியில்  எண்ணெய்  காயவைத்துத் தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து  பொடியாக 

 நறுக்கிய வெங்காயம், பச்சை  மிளகாய்  சேர்த்து  வதக்கியபின் வயலட்  கேபேஜ்  சேர்த்து  உப்பு

 போட்டுக்  கிளறி  மூடி  வைத்து  வேகவிடவும். அடிக்கடி  திறந்து  கிளறி  விடவும்.

 வெந்ததும்  கடலைப் பருப்பு, தேங்காய்ப்பூ  சேர்த்துக்  கிளறி  இறக்கவும் . மல்லித்தழை 

 தூவிப்  பரிமாறவும்.

வாழைப்பூ பிதுக்கம் பருப்பு கூட்டு

வாழைப்பூ   பிதுக்கம் பருப்பு  கூட்டு 


தேவையானவை;

     சிறிய  வாழைப்பூ- 1,

      உலர்ந்த  மொச்சைக்கொட்டை- 1 கப்,

     மஞ்சள்பொடி- 1 டீஸ்பூன்,

  மிளகாய்ப்பொடி- 1/2 டீஸ்பூன் ,

    மல்லிப்பொடி- 1/2 டீஸ்பூன்,

   சீரகப்பொடி- 1/2 டீஸ்பூன்,

  தேங்காய்ப்பூ- 1 டேபிள்ஸ்பூன்,

  உப்பு, எண்ணெய் - தேவைக்கு,

தாளிக்க- கடுகு, உளுத்தம்பருப்பு- தலா  1/4 டீஸ்பூன் 

                  கறிவேப்பிலை- 1 ஈர்க்கு 

செய்முறை;

          மொச்சைக்கொட்டையை  முதல்  நாள்  இரவே  ஊறபோடவும் . சமைப்பதற்கு  முன் 

மொச்சைக்கொட்டையை  விரல்கினால்  பிதுக்கி  பருப்பை  மட்டும்  தனியாக எடுத்துக்  கொள்ளவும்.

இதுவே  பிதுக்கம்  பருப்பு  எனப்படும்.  

            வாழைப்பூவை  ஆய்ந்து  மோரும், மஞ்சள்பொடியும்  கலந்த  நீரில்  போட்டுப்  பிசிறிக் 

 களைந்து நீரை  வடித்த பின்  வாணலியில்  எண்ணெய்  காயவைத்துத்  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து,  விரும்பினால் பொடியாக  நறுக்கிய  வெங்காயம் , பச்சை  மிளகாய்  சிறிது  சேர்த்து 

 வதக்கியபின்  வாழைப்பூவைச்  சேர்த்து ஒரு  நிமிடம்  புரட்டி  மஞ்சள்பொடி, மிளகாய்ப்பொடி, 

மல்லிப்பொடி,சீரகப்பொடி, உப்பு  சேர்த்துச்  சிறிது  நீர்  விட்டுக் கிளறி  மூடி  வெயிட்  போட்டு 

 இரண்டு  பிரஷர்  வந்ததும்  அடுப்பை  அணைக்கவும்.பிதுக்கம்  பருப்போடு  மஞ்சள்பொடி  நீர் 

 சேர்த்துப்  பாத்திரத்தில்  போட்டுக்  குழைந்து  விடாமல்  மலர வேகவைத்து, வெந்த வாழைப்பூ  கலவையோடு  சேர்த்துக்  கிளறி  அடுப்பில்  வைத்து  ஒரு  நிமிடம்  கொதிக்கவிட்டு மல்லித்தழை  தூவிக்  கிளறிப்  பரிமாறவும்.

         இந்தக்கூட்டு  மிகுந்த  சத்தும்  சுவையும்  நிரம்பியது. சாப்பாட்டில்  சேர்த்துக்  கொள்ளலாம். சாதத்தோடு 
 
    பிசைந்து   சாப்பிடலாம்.

குதிரைவாலி கொள்ளு கஞ்சி

குதிரைவாலி  கொள்ளு  கஞ்சி


 தேவையானவை;

           குதிரைவாலி  அரிசி- 1 கப் ,  

         கொள்ளு- 1/2 கப்,

        உப்பு- தேவைக்கு.

 செய்முறை;

               கொள்ளை  வெறும்  வாணலியில்  வறுத்து  நீரில்  மூழ்கும்  வரைப்  போட்டு  அரை 

மணி  நேரம் ஊறவிடவும். குதிரைவாலியைக்  களைந்து  நீர்  வடித்து  ஊறிய  கொள்ளோடு 

 சேர்த்துக்  குக்கரில்  மூழ்கும் அளவிற்கு  மேல்  தண்ணீர்  விட்டு  உப்பு  சேர்த்து  மூடி  வெயிட் 

 போட்டு  பிரஷரில்  குழைய  வேகவிட்டு அடுப்பை  அணைக்கவும்.பிரஷர்  தணிந்ததும்

  திறந்து  மேலும்  நீர்  சேர்த்து  கிளறிவிட்டு  ஒரு  நிமிடம்  கொதிக்க  விட்டு இறக்கவும்.  இது 

 ஒரு  ஆரோக்கிய  உணவு. காலை  மற்றும்  இரவு  உணவாக  சர்க்கரை  நோயாளிகள் எடுத்துக் 

 கொள்ளலாம். தேவையில்லாத  கொழுப்பை  நீக்கி  உடம்பை  இளைக்க  வைக்கும்  தன்மை 

 கொண்டது   கொள்ளு.

திங்கள், 7 ஏப்ரல், 2014

தினை பருப்பு அடை

 தினை  பருப்பு  அடை



தேவையானவை;

தினை-  1 கப் ,

துவரம்பருப்பு, கடலைப்பருப்பு,

பாசிப்பருப்பு- தலா  1/4 கப்,

மிளகாய்  வற்றல்- 4,

சீரகம்- 1 டீஸ்பூன்,

பெருங்காயப்  பொடி - 1/2 டீஸ்பூன்,

பெரிய  வெங்காயம்- 1,

கறிவேப்பிலை- சிறிது,

மல்லிதழை- சிறிது,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

செய்முறை;

திணையைத்  தண்ணீரில்  ஒரு  மணி  நேரம்  ஊறவிடவும். துவரம்பருப்பு, கடலைப்  பருப்பு,

பாசிப்பருப்பு , மிளகாய்வற்றல்  நான்கு  சீரகம், பெருங்காயப்பொடி  உப்பு  சேர்த்துக் கொகொரப்பாகப் பொடிக்கவும். ஊறிய  தினையை  நீர்  வடித்து  நைசான  மாவாகச்  சிறிது  நீர் சேர்த்து  அரைக்கவும்.இந்த  மாவுடன்   பருப்புப்  பொடிகளைச்  சேர்க்கவும். பொடியாக நறுக்கிய வெங்காயம்  மல்லித் தழை  சேர்க்கவும். கறிவேப்பிலையைக்  கிள்ளிப்போட்டுக்  கிளறிக் காய்ந்த  தோசைக்கல்லில்  அடைகளாக ஊற்றிச்  சுற்றிலும்  எண்ணெய் விட்டுத்  திருப்பிப் போட்டு  முறுகலாக  வேகவிட்டு  எடுக்கவும்.நார்ச்சத்து   மிகுந்த  இந்த  அடைக்கு  வெண்ணெய், வெல்லம்  ஸ்பெஷல்  சைட்  டிஷ். தேங்காய் 
சட்னியும்  நன்றாக  இருக்கும். எதுவும்  தொட்டுக்  கொள்ளாமலும்  சுவையாகவே  இருக்கும். 

பனீர் வெஜ் குருமா

பனீர்  வெஜ்  குருமா


தேவையானவை;

முருங்கைக்காய், உருளைக்கழங்கு, கேரட்,

குடமிளகாய்,- தலா  சில  துண்டுகள்,

உரித்த  பச்சைப்பட்டாணி- 1/2 கப்,

சிறுதுண்டுகளாக  பனீர்- 50  கிராம்,

தக்காளி- 2, 

பெரியவெங்காயம்  1,

பச்சைமிளகாய்- 4,

இஞ்சி- சின்னதுண்டு,

பூண்டு- 5 பல்,

சோம்பு, கசகசா- தலா  1 டீஸ்பூன்,

முழு முந்திரிப்பருப்பு-  4,

தேங்காய்-  சின்னமூடி,

மல்லி , புதினா  தலா  சிறிது,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

தாளிக்க;

பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ  இதழ், ஏலக்காய்,

பிரிஞ்சி இலை- தலா  2

செய்முறை;

   தேங்காய், பச்சை  மிளகாய், இஞ்சி, சோம்பு, கசகசா , பூண்டு  ஆகியவற்றை  நீர்விட்டு 

நைசாக அரைத்து  எடுக்கவும்.

           வாணலியில்  எண்ணெய்  விட்டுத்  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்தபின்  பொடியாக 

நறுக்கிய  தக்காளி, வெங்காயம்  புதினா  சேர்த்து  வதக்கவும். காய்களையும்  அரைத்த 
விழுதையும் சேர்த்துக்  கிளறி  நீரும்  உப்பும்  சேர்த்துக்  கிளறிக்  கொதிக்கவிடவும். எல்லாம் ஓன்று  சேர்ந்து  கொதித்துப் பச்சை  வாசனை  போய்  காய்களும்  நன்கு  வெந்து  குழம்பு பதத்தில்  இருக்கும்போது  பாலில்  ஊறிய முந்திரிப் பருப்பை  அரைத்துச்  சேர்க்கவும். பனீர் துண்டுகளை  சிறிது  நெய்விட்டு  மிதமான  தணலில் லேசாகவறுத்துக்  குழம்பில்  சேர்த்துக் கொதிக்கவிட்டு  இறக்கவும்.

             எலுமிச்சைச்  சாறு  சேர்த்துக்  கிளறி  மல்லிதழை  தூவிப்  பரிமாறவும்.

முருங்கைக்காய் குருமா

 முருங்கைக்காய்  குருமா 


 தேவையானவை;

முருங்கைக்காய் - 3,

பெரிய  வெங்காயம்- 1

தக்காளி- 2,

பச்சை  மிளகாய்- 4

சோம்பு- 1 டீஸ்பூன்,

கசகசா- 1/2 டீஸ்பூன்,

இஞ்சி- சின்னதுண்டு,

பூண்டு- 5 பல்,

முழு  முந்திரிப் பருப்பு- 5

மல்லி, புதினா- தலா  சிறிது 

உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

தாளிக்க;

பட்டை, கிராம்பு, அன்னாசிப்பூ இதழ், ஏலக்காய் ,

பிரிஞ்சி இலை- தலா  2 கறிவேப்பிலை- சிறிது 


செய்முறை 

    இரண்டு  டேபிள்ஸ்பூன்  தேங்காய்ப் பூவுடன்  பச்சைமிளகாய், இஞ்சி, சோம்பு,

கசகசா, பூண்டு  ஆகியவற்றை  ஒன்றாகச்  சேர்த்து  நீர்  விட்டு  நைசாக  அரைக்கவும்.

        வாணலியில்  எண்ணெய்விட்டுத் தாளிக்கும்  பொருட்கள்  தாளித்துப்  பொடியாக 

நறுக்கிய  தக்காளி, வெங்காயம், புதினா  சேர்த்துப்  பொன்னிறமாக  வதக்கியபின்  அரைத்த 

 விழுது, முருங்கைக்காய்த்  துண்டுகள்  சேர்த்துக் கிளறி  உப்பு, நீர்  சேர்த்துக்  கொதிக்கவிடவும்.

முருங்கைக்காய்  வெந்து  நல்ல  மணத்துடன்  குருமா  கொதிக்கும்போது  பாலில்  ஊறிய  முந்திரிப் 

பருப்பை  அரைத்துச்  சேர்த்துக்  கொதித்ததும்  இறக்கி  எலுமிச்சைச்  சாறு  சேர்த்து , மல்லித்தழை 

தூவிக்  கிளறிப்  பரிமாறவும்.

கோகனட் மில்க் வீட் புலவு

கோகனட்  மில்க்  வீட்  புலவு



கோகனட்  மில்க்  வீட்  புலவு 

தேவையானவை;

கோதுமைக்குருணை- 1 கப் ,

முற்றிய  தேங்காய்- 1,

பூண்டு- 6 பல்,

பச்சை  மிளகாய்- 4,

சீரகப்பொடி- 1 டீஸ்பூன்,

முந்திரிப்  பருப்பு  50 கிராம்,

நெய்- 50 கிராம்,

எலுமிச்சை- 1 சின்ன  பழம்,

மல்லி, புதினா- தலா  சிறிது,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

தாளிக்க;

கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ  இதழ் , ஏலக்காய், 

பிரிஞ்சி  இலை- தலா  2,

செய்முறை;

தேங்காயை  அரைத்து  மூன்று  கப்  பால்  எடுக்கவும். கோதுமைக்  குருணையை 

நெய்  விட்டு  வறுத்துத்  தேங்காய்ப்  பாலுடன்  குக்கரில்  போட்டு  மூடி வைத்து 

ஊறவிடவும். அடுப்பில்  வைக்க  வேண்டாம். 

                 வாணலியில்  எண்ணெய்  காய வைத்துத்  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்து 

நறுக்கிய  பூண்டு  பற்கள் , கீறிய  பச்சை  மிளகாய்  சேர்த்து  மிதமான  தணலில்  லேசாக 

வதக்கி  அரிசி, தேங்காய்ப்பால்  கலவையில்  சேர்த்து  அடுப்பில்  வைக்கவும். சீரகப்பொடி 

உப்பு , மல்லி ,  புதினா  சேர்த்துக்  கிளறிக்  கொதித்ததும்  மூடி   வெயிட்  போடவும். ஒரு 

பிரஷர்  வந்ததும்  மூன்று  நிமிடம்  அடுப்பை  சிம்மில்  வைத்து  அணைக்கவும்.

           பிரஷர்  தணிந்ததும்  திறந்து  அடுப்பில்  வைத்து  மிதமான  தணலில்  கிளறி 

எலுமிச்சைச்  சாறு, நெய், நெய்யில்  வறுத்த  முந்திரிப்  பருப்பு  சேர்த்துக்  கிளறி  மல்லித் 

தழை  தூவிப்  பரிமாறவும்.

              இந்தச்  சுவையான  புலவிற்கு  காரக்கறிகள், சிப்ஸ், மற்றும்  சிக்கன்  வறுவல் , 

மட்டன்  வறுவல்  போன்றவை  பொருத்தமான   சைட்  டிஷ்.

மிதிபாகல் மசாலா கறி

மிதிபாகல்  மசாலா  கறி 


தேவையானவை;

மிதிபாகல் காய் - 1/4 கிலோ,

புளி- சின்ன  எலுமிச்சையளவு,

இஞ்சி, பூண்டு  விழுது- 1 டேபிள் ஸ்பூன்,

தக்காளி-1,

பெரிய  வெங்காயம்- 1,

புதினா, மல்லி- சிறிது,

மஞ்சள்பொடி- 1/2 டீஸ்பூன்,

கறிமசால் பொடி- 2 டீஸ்பூன்,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு.


தாளிக்க;

  பட்டை, கிராம்பு, ஏலக்காய்- தலா  2, 

 கறிவேப்பிலை- சிறிது 


செய்முறை;

       பாகல் காய்களை  ஆய்ந்து  அலசியபின்  மஞ்சள், உப்புப்பொடிகள்  சேர்த்துப்  பிசிறி  வைக்கவும்.வாணலியில்  எண்ணெய்  காயவைத்துத்  தாளிக்கும்  பொருட்கள் தாளித்து  பொடியாக  நறுக்கிய தக்காளி, வெங்காயம், புதினா, இஞ்சி, பூண்டு  விழுது  சேர்த்துச்  சிறிது  நேரம்  வதக்கியபின்  பாகற் கைகளைச்  சேர்த்து  வதக்கவும். புளி  கரைத்த  நீர் விட்டுக்  கறிமசால் பொடி  சேர்த்துக்  கொதிக்க  விடவும்.  காரம்  தூக்கலாக  வேண்டும்  என்றால்  சிறிது  மிளகாய்ப்பொடி  சேர்க்கலாம். உப்பு  தேவை என்றால்  போட்டுக்  கொள்ளவும்.
            காய்கள்  வெந்து நீர்  வற்றியபின்  சுருளக்  கிளறி  எண்ணெய்  பிரிந்தவுடன்  இறக்கி  மல்லிதழை தூவிப்  பரிமாறவும்.

மிதி பாகல் மசாலா குழம்பு

மிதி  பாகல் மசாலா  குழம்பு



தேவையானவை 

மிதிபாகல்  காய் -1/4 கிலோ,

புளி- சின்ன  எலுமிச்சையளவு,

பெரிய  வெங்காயம்- 1 

தக்காளி- 1,

இஞ்சி- சின்ன துண்டு,

பூண்டு- 6 பல்,

மிளகாய்ப்பொடி- 1 டீஸ்பூன்,

மல்லிப்பொடி- 1 டீஸ்பூன்,

கரம் மசாலாப்பொடி- 1 டீஸ்பூன்,

மஞ்சள்பொடி- 1/2 டீஸ்பூன்,

தேங்காய்ப்பூ- 3 டேபிள் ஸ்பூன்,

மல்லி, புதினா- தலா  சிறிது,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

தாளிக்க;

பட்டை, கிராம்பு, ஏலக்காய் - தலா  2, கறிவேப்பிலை- சிறிது 

செய்முறை;

       பாகற்காய்களை  நறுக்காமல்  காம்புகளை  மட்டும்  ஆய்ந்து  அலசியபின்  மஞ்சள்பொடி, உப்புப்பொடி சேர்த்துப்  பிசிறி  வைக்கவும். இஞ்சி, பூண்டை  ஒன்றாக  விழுதாக  அரைக்கவும்.
வாணலியில்  எண்ணெய்  காயவைத்துத்  தாளிக்கும்  பொருட்கள்  தாளித்துப்  பொடியாக  நறுக்கிய  தக்காளி, வெங்காயம், புதினா  சேர்த்துச்  சிறிது  நேரம்  வதக்கியபின்  பாகற்காய்களைச்  சேர்த்து  வதக்கிப் புளி  கரைத்த  நீர்விடவும்  மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி, கரம்  மசாலாப்  பொடி  சேர்க்கவும்.. இஞ்சி   பூண்டு விழுது  சேர்த்துக்  கிளறிவிடவும். போதுமான  நீர்விட்டுத்  தேவைப்பட்டால்  உப்பு  போட்டுக்  கைகள்  வெந்து 
குழம்பானதும்  தேங்காய்ப்பூவை  அரைத்துப்  பாலை  மட்டும்  வடிகட்டி  எடுத்துக்  குழம்பில்  சேர்த்துக்  கிளறிக் கொதித்ததும்  இறக்கி  மல்லிதழை  தூவிப்  பரிமாறவும்.

            இந்த  மசாலா  குழம்பைச்  சாதத்தோடு  பிசைந்து  சாப்பிட  மிகவும்  சுவையாக  இருக்கும்.

மிதிபாகல் காரக்குழம்பு

மிதிபாகல்  காரக்குழம்பு


தேவையானவை;

மிதிபாகற்காய்- 1/4 கிலோ,

புளி- சின்ன  எலுமிச்சையளவு,

பெரிய  வெங்காயம்- 1,

தக்காளி- 1,

பூண்டு- 6 பல்,

மிளகாய்த்தூள்- 1 டீஸ்பூன்,

மல்லித்தூள்- 2 டீஸ்பூன்,

சீரகத்தூள்- 1/2 டீஸ்பூன்,

மஞ்சள்தூள்- 1/2 டீஸ்பூன்,

தேங்காய்ப்பூ- 2 டேபிள்ஸ்பூன் ,

மல்லி, புதினா- சிறிது,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு,


தாளிக்க;

கடுகு, உளுந்தம்பருப்பு, வெந்தயம்- தலா  1/4 டீஸ்பூன்,

கறிவேப்பிலை- சிறிது 


செய்முறை;

       பாகற்காயின்  பேபி போல்  இந்த  அழகிய  சிறிய  மிதி  பாகற்காய்கள்  காட்சியளித்தாலும்  கசப்புச்சுவையில்  பெரிய  பாகற்காய்க்குச்  சிறிதும்  சளைத்தது  அல்ல. இதோ  இந்த  சமையல் பக்குவத்தில் கசப்பு  காணாமல் போய்  அருமையான  சுவை  கிடைக்கும்.
பாகற்காயை  நறுக்காமல்  காம்புகளை  மட்டும்  ஆய்ந்து  அலசியபின்  மஞ்சள்பொடி  உப்புப் 
பொடி  சேர்த்துப்  பிசிறி  வைக்கவும்.வாணலியில்  எண்ணெய்  காயவைத்துத்   தாளிக்கும்  பொருட்கள்  தாளித்துப்  பொடியாக  நறுக்கிய வெங்காயம், தக்காளி, புதினா  சேர்த்துச்  சிறிது  நேரம்  வதக்கியபின்  பாகற்காய்களைச்  சேர்த்துச்  சிறிது நேரம்  மிதமான  தணலில்  வதக்கவும். புளி  கரைத்த  நீர்  சேர்த்து  மிளகாய்ப்பொடி, மல்லிப்பொடி, சீரகப்பொடி 
சேர்க்கவும்.போதுமானநீரும்  தேவைப்பட்டால்  உப்பும்  சேர்த்துக்  காய்கள்  வேகும்வரைக்  கொதிக்கவிட்டு ,அரைத்த  தேங்காய்  விழுது  சேர்த்துக்  கிளறிக்  கொதிக்கவிட்டுக்  குழம்பாக  இறக்கி  மல்லிதழை  தூவிப் பரிமாறவும்.

              சாதத்தோடுப்  பிசைந்து  சாப்பிடச்  சுவையாக  இருக்கும்.

வெங்காயத் தாள் பால் கூட்டு

வெங்காயத் தாள்  பால்  கூட்டு 


தேவையானவை;

       பொடியாக  நறுக்கிய  முற்றாத  வெங்காயத்தாள்- 2 கப்,

        பாசிப்பருப்பு-- 1/4 கப்,

        பூண் டு - 4 பல்,

        தக்காளி- 1

        மஞ்சள்பொடி- 1/2 டீஸ்பூன்,

         மிளகாய்பொடி- 1/4 டீஸ்பூன்,

          மல்லிபொடி- 1/2 டீஸ்பூன் 
         
            சீரகப்பொடி- 1 டீஸ்பூன்,

          கீறிய  பச்சை  மிளகாய்- 2,

         தேங்காய்- சின்ன  மூடி,

         உப்பு, எண்ணெய் - தேவைக்கு.


  செய்முறை;

         பாசிப்பருப்பை  நீரும்  மஞ்சள்பொடியும்  சேர்த்து  மலர  வேகவைத்து  எடுத்து  வைக்கவும். வாணலியில் எண்ணெய்  காய வைத்து  கடுகு, உளுத்தம்பருப்பு  தாளித்து நறுக்கிய  தக்காளி  பச்சை மிளகாய்  சேர்த்து  வதக்கவும்,வெங்காயதாளுடன்  சிறிதாக வெங்காயங்களும்  இருக்கும்  என்பதால்  வெங்காயம்  தேவையில்லை, தேவை  என்றால் 
சிறிது  வெங்காயம்  நறுக்கிப்  போட்டுக் கொள்ளலாம். பூண்டைதட்டிபோடவும் , வேங்காயதாளைச்  சேர்த்து வதக்கவும்.சிறிதளவு  நீர்  உப்பு, மிளகாய், மல்லி, சீரகப்பொடிகள்  சேர்த்து  வேக விடவும்.தாள்கள்  நன்கு  வெந்ததும்  பாசிப்பருப்பைச்  சேர்த்துக்  கிளறி  ஒன்று  சேர்ந்ததும்  திக்கான  தேங்காய்ப்பால் 
1/2 கப்  சேர்த்துப்  பொங்கியதும்  இறக்கிப்  பரிமாறவும்.

           சாதத்தோடு  பிசைந்து  சாப்பிடலாம். கறிவகைகளில்  ஒன்றாகவும்  பரிமாறலாம். 

ராகி புதினா ரொட்டி

ராகி  புதினா  ரொட்டி


 தேவையானவை;

             ராகி  மாவு- 1 கப்,

              பொடியாக  நறுக்கிய புதினா- 1 கப் 
                                
               பொடியாக  நறுக்கிய- வெங்காயம்- 1/2 கப்,
                 
              இஞ்சித்துருவல்- 1 டீஸ்பூன், 
             
                பச்சைமிளகாய்- 4,

              உப்பு, எண்ணெய்- தேவைக்கு,

செய்முறை;

     ராகிமாவுடன்  புதினா, வெங்காயம், இஞ்சித்துருவல் , நறுக்கிய  பச்சை  மிளகாய், உப்புத்தூள் ஆகியவற்றை   ஒன்றாக  நன்கு  கலக்கவும், நீர்  விட்டு  ரொட்டியாகத்  தட்டும்  பக்குவத்திற்குக் 
கெட்டியாகப்  பிசைந்து  மூடி வைக்கவும். அரை மணி  நேரம்  ஊற  விடவும்.வாணலியில்  எண்ணெய்  காய வைத்து  ரொட்டிகளாகத்  தட்டிப்  போட்டு  மிதமான  தணலில் திருப்பிப்  போட்டு  வேகவிட்டு  எடுக்கவும். தொட்டுக்  கொள்ள  எதுவும்  தேவையில்லை. தோசைக் 
 கல்லிலும்  சுட்டு  எடுக்கலாம்.

           சர்க்கரை  நோயாளிகளுக்கு  இது  சிறந்த  இரவு  உணவு.

பருப்ப கேரட் பணியாரம்

பருப்ப  கேரட்  பணியாரம் 



தேவையானவை;

பச்சரிசி, புழுங்கலரிசி- தலா  1/4 கப்,

துவரம்பருப்பு- 1 டேபிள் ஸ்பூன்,

கடலைப்பருப்பு- 1 டேபிள்   ஸ்பூன்,

பாசிப்பருப்பு- 1 டேபிள்  ஸ்பூன்,

உளுத்தம்பருப்பு- 1 டேபிள்  ஸ்பூன்,

கேரட்- 100 கிராம்,

பச்சை  மிளகாய்- 4,

இஞ்சி- விரற்கடையளவு,

மல்லி, புதினா- சிறிதளவு,

உப்பு, எண்ணெய்- தேவைக்கு 


செய்முறை;

                  பச்சரிசி, புழுங்கலரிசியை  ஒன்றாக  ஊறவைத்து  நீர்  வடித்து  பச்சை மிளகாய்  இஞ்சி, உப்பு  சேர்த்து  நீர் விட்டு  நைசாக  அரைத்து  எடுக்கவும்.  பருப்புகள்  அனைத்தையும்  விரும்பினால்  1 டீஸ்பூன்  சீரகம்  அல்லது  சோம்பு  சேர்த்து  ரவையாகப் பொடிக்கவும். கேரட்டைத்   தோல்  நீக்கித்  துருவி  நீர்  சேர்த்துச்  சற்றுத்  திப்பியாக  அரைத்து  எடுத்து  பருப்புப் பொடியோடு  கலந்து  அரைமணி  நேரம்  ஊறியபின்  அரிசிக்கலவையோடு  சேர்த்துக்  கலக்கவும்.மல்லி, புதினாவைப் பொடியாக  நறுக்கிபோடவும்.விரும்பினால்  சிறிது  வெங்காயம்  பொடியாக  நறுக்கிச்  சேர்க்கவும். எல்லாவற்றையும் நன்றாகக்  காய்ந்த  பணியாரக்  கல்லின்  குழிகளில்  எண்ணெய்விட்டு  மாவை  ஊற்றி  வெந்ததும்  திருப்பிபோட்டு சிவக்க  முறுகலாக  வேகவிட்டு  எடுக்கவும்.

           இந்தச்  சுவையான  பணியாரத்துக்குத்  தொட்டுக்கொள்ள  எதுவும்  தேவையில்லை. விரும்பினால்  தேங்காய்ச் சட்னி  தயாரிக்கலாம்.

தினை கேரட் உருண்டை

தினை  கேரட்  உருண்டை 


தேவையானவை;

    தினை- 1 கப்,

    கேரட்  துருவல்- 1 கப்,

   பொடித்த  வெல்லம்- 3/ 4 கப்,

   தேங்காய்ப்பூ- 2 டேபிள் ஸ்பூன்,

   ஏலக்காய்- 5

செய்முறை;

                   தினையைக்  களைந்து  நீரை  முற்றுமாக  வடித்து  மூடி  வைக்கவும். ஒரு  மணி  நைசான ரவையாகப் பொடிக்கவும்.கேரட்  துருவலை  நீர்  சேர்த்து  இரண்டு  நிமிடம்  வேகவிட்டபின் வெல்லம், தேங்காய்ப்பூ, ஏலப்பொடி சேர்த்தக்  கிளறவும். நீர்  வற்றியபின்  இறக்கி  தினை ரவையில்  சேர்த்துப்  பிசைந்து  எலுமிச்சை  அளவு உருண்டைகளாகப்  பிடித்து  துணி இட்லிதட்டில்  ஒன்றின்  மீது  ஒன்று  படாமல்  வைத்து  ஆவியில்  வேகவைத்து 
எடுக்கவும்.

       நல்ல  சத்தும்  சுவையும்  கொண்ட  இந்த  உருண்டையை  மாலை  நேரச் சிற்றுண்டியாக  அனைவரும்  சாப்பிடலாம்.

தினை கேரட் புட்டு

தினை  கேரட்  புட்டு 


தேவையானவை;

       தினை- 1 கப்,

       கேரட்  துருவல்- 1 கப்,

       பொடித்த  வெல்லம்- 1 கப்,

       தேங்காய்ப்பூ- 2 டேபிள்  ஸ்பூன்,

       ஏலக்காய்- 5,

       நெய்- 25 கிராம் 

       முந்திரி, திராட்சை- தலா 25 கிராம்,


செய்முறை;

       தினையை  வெறும்  வாணலியில்  வறுத்து  ஆறவைத்து  மிக்ஸியில்  நைசாகப்  பொடிக்கவும்.சிட்டிகை  உப்பு  கலந்த  நீர்  விட்டுப்  பிசிறிப்  பிசைந்து  கட்டிகளில்லாமல்  உதிரியாக  அழுத்தி  மூடி வைக்கவும்.

       கொதிக்கும்  நீரில்  வெல்லத்தைக்  கரைத்து  வடிகட்டி  கேரட் , தேங்காய்ப்பூ  சேர்த்து  அடுப்பில்வைத்துக்  கிளறவும்.இன்னொரு  அடுப்பில் , துணி  போட்ட  இட்லித்  தட்டில்  தினை  மாவைப்  பரப்பி வைத்து  ஆவியில்  வேகவிடவும். வெல்லக்  கலவையுடன்  ஏலப்பொடி  சேர்த்துத்  தண்ணீர்  வற்றி முதிரும்  வரைக்  கிளறி  இறக்கவும்.வெந்த  புட்டை  இறக்கி  வாயகன்ற  பாத்திரத்தில்  கொட்டி உதிர்த்து விட்டபின்  நெய்  விட்டுக்  கிளறியபின்  பாகுக்  கலவையைச்  சேர்த்து  அழுத்திக்  கிளறவும். அடுப்பில் வைக்க  வேண்டாம்.

            திராட்சை, முந்திரியை  நெய்யில்  வறுத்துப்  போட்டுக்  கிளறிப்  பரிமாறவும்.