செவ்வாய், 6 அக்டோபர், 2020

தால் கிரேவி

                 தால் கிரேவி
            ********************
தேவையானவை :
-------------------------------
துவரம்பருப்பு -- 2 டேபிள்ஸ்பூன்,
கடலைப் பருப்பு --- 2 டேபிள்ஸ்பூன்,
பாசிப்பருப்பு ----      2 டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் -- 1,
தக்காளி --- 2 ,
புதினா இலைகள் --- 1கைப்பிடி,
பூண்டு பற்கள் -        6,
பச்சை மிளகாய் --- 2,
சாம்பார் பொடி ---- 1 டீஸ்பூன்,
மஞ்சள் பொடி ----      1/4 டீஸ்பூன்,
முந்திரிப்பருப்பு-----   6
சோம்பு ---- 1 டீஸ்பூன் ,
உப்பு, எண்ணெய் -- தேவைக்கு.

செய்முறை :
-----------------------
மூன்றுவகை பருப்புகளோடு, மஞ்சள்பொடி சேர்த்து வெந்நீர் ஊற்றி ஊறவிடவும். முந்திரிப்பருப்பை சிறிது காய்ச்சிய பால், அல்லது வெந்நீரில் ஊறப்போடவும்.
வாணலியில் எண்ணெய் காயவைத்து சோம்பு போட்டு பொரிந்ததும், பொடியாக நறுக்கிய வெங்காயம், தக்காளி,புதினா, பூண்டு பற்கள்,பச்சை மிளகாய்  சேர்த்து நன்கு வதங்கியதும் குக்கரில் போட்டு, ஊறிய பருப்புகள் உப்பு,சாம்பார்பொடி  சேர்த்து, விரும்பினால் ஏதாகிலும் காய்த்துண்டுகள் சேர்த்து போதுமான தண்ணீர் விட்டு பிரஷரில், ஒரு பிரஷர் வந்ததும் அடுப்பைக் குறைத்து வைத்து ஐந்து நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.

பிரஷர் தணிந்ததும்,குக்கரைத்  திறந்து, கலவையை நன்கு மசித்து விட்டு தேவைப்பட்டால் நீர் சேர்த்து அடுப்பில் வைத்து, முந்திரிப்பருப்பை நைசாக அரைத்து சேர்த்து கொதித்ததும் இறக்கவும்.
இந்த கிரேவி இட்லி, தோசை, பொங்கலோடு சாப்பிட சூப்பர் டேஸ்ட்! 

திங்கள், 5 அக்டோபர், 2020

பாதாம் அல்வா

                பாதாம் அல்வா
              --------------------------------
செய்முறை :
---------------------
200 கிராம் பாதாம் பருப்பை வெந்நீரில் பத்து நிமிடங்கள் போட்டு வைத்து கைகளில் அழுத்திப் பிசைந்தால் தோல் பிரிந்து விடும். நன்கு புதிய நீரில் அலசி நீர் வடித்து மீண்டும் நீரில் போட்டு நான்கு மணி நேரம் ஊறியதும், நீர் வடித்து விழுதாக அரைக்கவும். 

விழுதை ஒரு கிண்ணத்தில் நிரப்பினால் இருக்கும் அதே அளவு சர்க்கரை எடுத்துக் கொள்ளவும்.150 கிராம் நெய் எடுத்துக் கொள்ளவும். 
அடி கனமான பாத்திரம் அல்லது வாணலியில் 50 கிராம் நெய் விட்டு பாதாம் விழுதை வதக்கவும். இரண்டு நிமிடம் கிண்டியபின் சர்க்கரை சேர்த்துக் கிளறவும். கலவை தளர்ச்சியாகும்.  சிறிது குங்குமப்பூவை சூடான அரை கப் பாலில் கலந்து இரண்டு நிமிடங்கள் வைத்திருந்து கலவையில் சேர்க்கவும். ஏலப்பொடி போடவும். சிறிது சிறிதாக நெய்யை ஊற்றி அல்வா சுருண்டு வரும்வரை கிளறி இறக்கவும்.  
குங்குமப் பூ சேர்ப்பதால் மஞ்சள் நிறம் வரும். இல்லையென்றாலும் இயல்பான பட்டர் நிறத்தில் இருக்கும் இந்த அல்வாவை கிளாஸ் பேப்பரில் சுற்றியும் வைக்கலாம். 

ஞாயிறு, 4 அக்டோபர், 2020

பருப்புருண்டை தயிர்க் குழம்பு


பருப்புருண்டை தயிர்க்குழம்பு

      **************************************

தேவை :
----------------
            துவரம் பருப்பு, கடலைப் பருப்பு-- தலா 1/2 கப்,
            புளி ----     சின்ன எலுமிச்சை அளவு,
             பச்சை மிளகாய் ----   4,
               சீரகம்  ---  1 டீஸ்பூன்,
                இஞ்சி ----   சின்ன துண்டு,
                 மிளகாய்த் தூள் ----   1/2 டீஸ்பூன்,
                 மல்லித்தூள் ----            1 டீஸ்பூன்,
                    மஞ்சள் தூள் --------      1/2 டீஸ்பூன்,
                   சின்ன வெங்காயம் ----   1கைப்பிடி,
                   பூண்டு பற்கள் ----            4,
                     தயிர் -------                         2 டேபிள்ஸ்பூன், 
                   உப்பு, எண்ணெய் ----      தேவைக்கு,
                   தாளிக்க :   கடுகு, உளுந்தம்பருப்பு,
                                           கறிவேப்பிலை.

  செய்முறை :
---------------------
                 துவரம் பருப்பு, கடலைப்பருப்பை ஒன்றாக நீரில் போட்டு,  குறைந்தது ஒரு மணிநேரம் ஊறியபின், முற்றுமாக நீர் வடித்து, பச்சைமிளகாய் ,சீரகம், இஞ்சி, உப்பு ( விரும்பினால் சிறிது பெருங்காயமும்)  சேர்த்து நீர் விடாமல் சற்று கொரகொரப்பாக அரைத்து எடுத்து, மிகமெல்லியதாக நறுக்கிய பூண்டு பற்கள், சிறிது மல்லித்தழை ( விரும்பினால் இரண்டு சின்ன வெங்காயம் மெலிதாக நறுக்கிப்போட்டு )சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டி  வைத்துக் கொள்ளவும்.

          வாணலியில் எண்ணெய் காயவைத்து, தாளிக்கும் பொருட்கள் தாளித்து,வெங்காயம், தக்காளித் துண்டுகள், பச்சைமிளகாய் சேர்த்து நன்கு வதங்கியபின் புளி கரைத்த நீர் விட்டு மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து போதுமான நீர் விட்டு குழம்பைச் சற்று நீர்க்கக் கொதிக்க விடவும். குழம்பு நல்ல மணமாக ,நல்ல நிறத்துடன் வரும்போது, பருப்புருண்டைகளை நான்கு நான்காகப் போட்டு, கரண்டியால் கிண்டாமல்,உருண்டைகள் உடைந்து விடாதபடி,  இரு பிடிகளையும் துணியால் பிடித்து ஆட்டி விட்டு, உருண்டைகள் நன்கு வெந்ததும், தயிர் சேர்த்துக் கொதித்ததும் இறக்கவும்.

மிகுந்த சுவையும், சத்துக்களும் நிறைந்த இந்தக் குழம்பை சூடான சாதத்தோடு பிசைந்து ருசிக்கலாம்.






 

சனி, 3 அக்டோபர், 2020

கொண்டைக் கடலை காரக்குழம்பு

                    கொண்டைக்கடலை காரக்குழம்பு

           **********************************

தேவை :
-------------
              பெரிய வெள்ளை கொண்டைக்கடலை ----     1கப்,
               சின்ன வெங்காயம் ------       1 கைப்பிடி,
                பூண்டு  பற்கள் -------                 10,
                  தக்காளி ------                                 2,
                புளி    -----------                                    சின்ன எலுமிச்சை அளவு,
                 மிளகாய்த்தூள் --------                 1/2 டீஸ்பூன்,
                 மல்லித்தூள் ---------                         1 டீஸ்பூன்,
                   சீரகத்தூள் --------                              1/2 டீஸ்பூன்,
                    மஞ்சள் தூள் --------                           1/2 டீஸ்பூன்,
                     வெல்லத்தூள் ------                          2 டீஸ்பூன்,
                     உப்பு, எண்ணெய் --------                 தேவைக்கு.
 
செய்முறை :
-------------------
      கொண்டைக்கடலை  நீரில் மூழ்கும் வரை ஊறப்போட்டு, குறைந்தது ஐந்து மணி நேரம் ஊறியதும், நீரை வடித்து, புதிய நீரில் உப்பு  சேர்த்து மலர வெந்தபின்  இறக்கவும்.
  வாணலியில் எண்ணெய் காயவைத்து, கடுகு, உளுந்தம் பருப்பு,வெந்தயம், கறிவேப்பிலை தாளித்து, உரித்த வெங்காயம், பூண்டு பற்கள், தக்காளித் துண்டுகள் , இரண்டு பச்சை மிளகாய்சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும், புளி கரைத்த நீர் விட்டு  ,மஞ்சள்தூள் ,மிளகாய் த்தூள்,மல்லித்தூள், சீரகத்தூள் ,உப்பு சேர்த்து போதுமான நீர் விட்டு பச்சை வாசனை போகும் வரை கொதித்ததும், வெந்த கொண்டைகடலை சேர்த்து சிறிதுநேரம் கொதித்து எண்ணெய் பிரிய ஆரம்பிக்கும் போது, வெல்லத்தூள் போட்டு, விரும்பினால் 2 டேபிள்ஸ்பூன் தேங்காய்ப்பால் அல்லது 2 டேபிள்ஸ்பூன் தயிர் சேர்த்து  கொதித்ததும் இறக்கவும்.
 
சூடான சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.  புட்டோடு சேர்த்துச் சாப்பிடலாம்.  மிகவும் சத்தும், சுவையும் நிரம்பிய குழம்பு. 

திங்கள், 21 செப்டம்பர், 2020

கத்தரிக்காய் தயிர்க் குழம்பு



               கத்தரிக்காய் தயிர்க் குழம்பு

                     ***************************

தேவை :

-----------------
                   பிஞ்சு கத்தரிக்காய்  ----- 4 ,      சின்ன வெங்காயம் ---- ஒரு கைப்பிடி,
                     பூண்டு பற்கள் -----     10,  தக்காளி ---- 2,     புளி --- சின்ன எலுமிச்சையளவு
                     தயிர் -----  2 டேபிள்ஸ்பூன், வெல்லத்தூள் --- 2 டீஸ்பூன்,
                      கறி வடகம் ---- சின்ன சைஸ் 2,  கறிவேப்பிலை  ,மல்லித்தழை, புதினா ---
                                                                                                                                              தலா ---சிறிது 
                        மிளகாய்த்தூள் ---- 1 டீஸ்பூன், மல்லித்தூள் - 1 டீஸ்பூன்,
                        மஞ்சள் தூள் ------  1/2. டீஸ்பூன்,
                       உப்பு, எண்ணெய் ------ தேவைக்கு ..

செய்முறை :

------------------------

                                     வாணலியில் எண்ணெய் காயவைத்து, கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும், உரித்த சின்ன வெங்காயம், பூண்டு பற்கள், இரண்டு பச்சை மிளகாய்கள் ,தக்காளித் துண்டுகள் சேர்த்து நன்கு வதங்கும் போது, கத்தரிக்காய்களை நான்காக வகுந்து போட்டு, மஞ்சள் தூள், புதினா, மல்லித்தழை
 சேர்த்து காய்கள் சுருங்கும் வரை வதங்கியபின், புளித்தண்ணீர்  விட்டு மிளகாய்த் தூள், மல்லித்தூள்,  1/2 டீஸ்பூன் சீரகத்தூள் சேர்த்துப் போதுமான நீர் விட்டு காய்கள் குழைந்து, குழம்பு பச்சை  வாசனை போய்  திக்காகி எண்ணெய்  மிதக்கும் நிலையில், வெல்லம் போட்டு, தயிரைக் கலக்கி ஊற்றிக் கொதித்ததும், இன்னொரு பர்னரில், நல்லெண்ணெய் காயவைத்து  கறி வடாம் பொரித்துக் கொதிக்கும் குழம்பில் கொட்டிக் கிளறிவிட்டு இறக்கவும்..
  
                          சூடான சாதத்தோடு  பிசைந்து  சாப்பிட சூப்பர் குழம்பு . சுட்ட. அப்பளமும், பருப்புத் துணையானால் தேவாமிர்தம்  .

 

வியாழன், 17 செப்டம்பர், 2020

குதிரைவாலி பாயாசம்

                                குதிரைவாலி பாயாசம்

                   ++++++++++++++++++++++

   தேவை 

***********

           குதிரைவாலி அரிசி  ----  1/2 கப்,  

           பாசிப்பருப்பு  -----                   1/4 கப்,

           சர்க்கரை -----                            1 கப்,

          பால் --------                                    2 கப், 

          திராட்சை, முந்திரி  ------       தலா 20 கிராம்,

         ஏலக்காய் -------                          6

         நெய் -------                                  50 கிராம்,

         கடலைமாவு --------                1 டேபிள்ஸ்பூன்.

செய்முறை

*****************

குதிரைவாலி, பாசிப்பருப்பை ஒன்றாக சிறிது நெய் சேர்த்து வறுத்து, 1 கப் பால், இரண்டு கப் நீர் சேர்த்து நன்கு குழைந்து  கரைந்ததும்  சர்க்கரை சேர்த்து, மீதி பாலையும் ஊற்றி ஏலப்பொடி போட்டு, கடலைமாவை நெய் சேர்த்து தளர்ச்சியாக. வாசம்  வர வறுத்து  பாயாசத்தில்  சேர்த்து, திராட்சை  முந்திரி  நெய்யில்  வறுத்து போட்டு  இறக்கவும். 



 

திங்கள், 14 செப்டம்பர், 2020

எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு


எண்ணெய் கத்தரிக்காய் குழம்பு       

*************************************************************************

தேவை :          

----------------
             பிஞ்சு கத்தரிக்காய் ----- 4,
              சின்ன வெங்காயம்  ----- 1கைப்பிடி,
              பூண்டு பற்கள் ------ 6 ,
             புளி ------- சின்ன எலுமிச்சை அளவு,
              பச்சை மிளகாய்  ---- 4 , தக்காளி  --- சின்னதாக இரண்டு,
              மஞ்சள் பொடி ---- 1/4 டீஸ்பூன்,    மிளகாய்ப்பொடி ------ 1/2 டீஸ்பூன்,
              மல்லிப்பொடி ---  1 டீஸ்பூன், 
               சீரகப்பொடி ---- 1/2 டீஸ்பூன், மல்லித்தழை - சிறிது, தயிர் - 2 டேபிள்ஸ்பூன் ,
                கறிவடகம் --- சின்ன சைஸ் 2 , வெல்லத்தூள் ----- 1 டீஸ்பூன்,
                 கறிவேப்பிலை ----- 1 ஆர்க்கு  ,உப்பு, எண்ணெய் ---  தேவைக்கு..

செய்முறை :

--------------------------
                    வாணலியில் எண்ணெய் காயவைத்து, கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும், உரித்த வெங்காயம், பூண்டு பற்கள் தக்காளித் துண்டுகள் சேர்த்து நன்கு வதங்கியதும், நான்காக வகுந்த கத்தரிக்காய்களைச் சேர்த்து வதக்கி, காய்கள் நன்கு சுருங்கியதும், புளித்தண்ணீர் விட்டு, மஞ்சள் பொடி, மிளகாய்ப்பொடி ,மல்லிப்பொடி ,சீரகப்பொடி சேர்த்துப் போதுமான நீர் விட்டு கொதிக்கவிட்டு  பச்சை வாசனை போய்  நல்ல மணத்துடன், எண்ணெய் பிரியும் தருணத்தில் வெல்லம், தயிர் சேர்த்து கொதிக்க விட்டு, நல்லெண்ணெய் வேறு பர்னரில் காயவிட்டு கறிவடகம் உதிர்த்து விட்டுப் பொரிந்ததும் குழம்பில் கொட்டி இறக்கவும்.


      


 

வியாழன், 10 செப்டம்பர், 2020

வடைகறி

                               வடைகறி                                                              **********                           

 தேவை :            

------------

            கடலைப்பருப்பு ----- 1 கப்,       சோம்பு  ---- 1டீஸ்பூன்,  பச்சைமிளகாய் ---- 4 ,

            இஞ்சி - சின்ன துண்டு,    பெரிய வெங்காயம் ---- 1 ,    தக்காளி --- 1, 

             புதினா, மல்லி  --- தலா சிறிது.  எண்ணெய், உப்பு --- தேவைக்கு.         

 செய்முறை : 

--------------------

                     கடலைப் பருப்பை ஒரு மணி நேரம் ஊறவிட்டு  நீர் வடித்து, பச்சை மிளகாய், இஞ்சி  , சோம்பு, உப்பு சேர்த்து, தேவைப்பட்டால் மட்டுமே சிறிது நீர் தெளித்து, ரொம்ப கொரகொரப்பாகவோ,  அல்லது மிகவும் நைசாகவோ இல்லாமல் ரவை போல அரைத்த பின், சிறிது மல்லி, புதினா சேர்த்து சுற்றி எடுத்து மெலிதாக நறுக்கிய வெங்காயம் கொஞ்சமாகப் போட்டுப் பிசைந்து, காய்ந்த எண்ணெயில்  வடைகளாக,  மெலிதாக இல்லாமல் சற்று மொத்தமாகத் தட்டிப்  போட்டு நன்கு வேகவிட்டு எடுக்கவும். முறுகலாகக் கூடாது. ஏனெனில் முறுகிய வடைகள் குழம்பை வாங்குவது கடினம். அதே சமயம் வேக்காடு போதுமான அளவு இல்லையெனில் வடைகள் குழம்பில் சிதைந்து விடும்.

                        வடைகளை மூன்று நான்காக விண்டு வைத்துக் கொள்ளுங்கள்.

                         இப்போ குழம்புக்காக ,வாணலியில்  எண்ணெய் காயவைத்து, கடுகு  ,உளுந்தம் பருப்பு ( அல்லது பட்டை கிராம்பு)  , கறிவேப்பிலை தாளித்து,  பொடியாக நறுக்கிய. வெங்காயம், தக்காளி இரண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி, நீர் விட்டு உப்பு,  மஞ்சள் பொடி  1/4 டீஸ்பூன் ,மிளகாய்ப்பொடி , மல்லிப்பொடி, சீரகப்பொடி தலா 1/2 டீஸ்பூன் சேர்த்துக்  கொதிக்க விடவும். விரும்பினால்  சிறிது  புளி நீர் விடலாம்.

                   ( வடைக்கு அரைத்த மாவையே சிறிது வைத்திருந்து, நீர் விட்டுக் கரைத்து விட்டாலும் குழம்பு திக்காக வரும். ஏனென்றால் தேங்காய் சேர்ப்பதில்லை.தேங்காய் வடைகறியின் பக்குவத்தையும்,  சுவையையும் குறைக்கிறது என்பது என் கருத்து மற்றும் அனுபவம்  .)

                  குழம்பு பச்சை வாசனை மறைந்து நல்ல மணம் வரும் போது, தேவைப்பட்டால் நீர் சேர்த்து குழம்பை லூசாக்கிக் கொதித்ததும், வடைகளைச் சேர்க்கவும்.  வடை சேர்த்து சில நிமிடங்கள் கொதித்த பின்னர் குழம்பும், வடைகளும் சுவையையும், மணத்தையும் ஒன்றுக்கொன்று பரிமாறிக் கொள்ளும் போதுதான் வடைகறி முழுமையான பக்குவத்துக்கு வரும். இறக்கும் போது சற்று தளர்ச்சியாக இறக்கினால் ,

வடைகள் குழம்பை உறிஞ்சி,  ரொம்ப இறுகிவிடாமல் சாப்பிட சுவையாக. இருக்கும்.

               




தஹி கடி

                                தஹி கடி                                                                *************       

      தேவை :

                கடலை மாவு ---- 1 டேபிள்ஸ்பூன்,       பூண்டு பற்கள் ---- 4,

                பெரிய வெங்காயம் -- 1,   தக்காளி -- 1,மல்லித்தழை - சிறிது,

                தயிர் -    1 கப்,     மிளகாய்த்தூள் , மல்லித்தூள், சீரகத்தூள் --- 

                                                                                                                தலா ----  1/2 டீஸ்பூன்,


          எண்ணெய், உப்பு -----  தேவைக்கு :

    செய் முறை :

                      கடலை  மாவை  வெறும்  வாணலியில் வறுத்தெடுக்கவும். 

                        வாணலியில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம்  ,தக்காளி, பூண்டு மல்லித்தழை சேர்த்து வதக்கவும்.  பச்சைமிளகாயை கீறிப் போட்டு எல்லாம் வதங்கி தொக்கு போல ஆனதும் , மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகத்தூள், உப்பு சேர்த்துக் கடலை  மாவுடன் நீர் சேர்த்து  சற்று நீர்க்கக் கரைத்து ஊற்றி நன்கு கொதித்து, பச்சை வாசனை  நீங்கி  ,குழம்பு நல்ல வாசனையோடு  திரண்டதும், தயிர்  சேர்த்து கிளறி, பொங்கியதும் இறக்கவும்.

                         விரும்பினால் காய்கள் சேர்த்தும் செய்யலாம். போண்டா பொரித்து  கொதித்து இறக்கியதும் போடலாம் . இது  வட இந்தியாவின் பக்குவத்தில் மோர்க்குழம்பு. சாப்பாட்டில் பிசைந்து சாப்பிடலாம். இட்லி, தோசை, பொங்கல், வடை போன்றவற்றுக்குத் தொட்டுக் கொள்ளலாம்.





 

திங்கள், 7 செப்டம்பர், 2020

கவுனி தித்திப்பு பொங்கல்


                   கவுனி தித்திப்பு பொங்கல் 

                          *********************************************************

தேவை :
--------------
        கவுனி அரிசி  ----  1 கப்,
        பால்   ----                  2 கப் ,
       சர்க்கரை ----            1 1/2 கப், 
       நெய்  ---------               100 கிராம்,
        ஏலக்காய்    -------     6,
         திராட்சை,  முந்திரி ---- தலா 20 கிராம்.

செய்முறை :
-----------------
          கவுனி அரிசியை வெறும் வாணலியில் லேசாக வறுத்து, குக்கரில் போட்டு நாலு கப் நீர் சேர்த்து மூடி வைத்து இரண்டு மணி நேரம் ஊறவிட்டபின், இரண்டு கப் பால் சேர்த்து அடுப்பில் வைத்து மூடி வெயிட் போடவும். ஒரு பிரஷர் வந்ததும், அடுப்பை குறைத்து வைத்து பதினைந்து நிமிடங்கள் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும். 

           பிரஷர் தணிந்ததும் குக்கரைத் திறந்து, குழைந்திருக்கும் கலவையை கரண்டியால் மசித்து விட்டு, அடுப்பில் வைத்து ( குறைந்த தணலில்) ,சர்க்கரை சேர்த்துக் கிளறி, நெய் விட்டு ஏலப்பொடி போட்டு நன்கு கிளறி, நெய்யில் வறுத்த திராட்சை, முந்திரி சேர்த்துக் கிளறி இறக்கி,பரிமாறவும். செம டேஸ்ட்! 

                  


ஞாயிறு, 6 செப்டம்பர், 2020

மாப்பிள்ளை சம்பா கிச்சடி

               

                     மாப்பிள்ளை சம்பா கிச்சடி

                                   ***************************************************************************

தேவை :

---------------------

மாப்பிள்ளை சம்பா (சிகப்பு) அரிசி ----  1 கப்  ,

பீட்ரூட், கேரட், பீன்ஸ், குடமிளகாய், பச்சைப்பட்டாணி போன்ற காய்கள் ---- தலா சிறிது (எல்லாமாக 200 கிராம் அளவில்)                                           தக்காளி -- 1 ,       பெரிய வெங்காயம் -சின்னதாக 1,    பச்சை மிளகாய் --- 3 ,மல்லி, புதினா - -தலா சிறிது,

எண்ணெய், உப்பு,  கடுகு, உளுந்தம் பருப்பு -  தேவைக்கு,

நெய் - 1 டேபிள்ஸ்பூன்.                                                                   -----------------------------------------------

செய்முறை                                                                                          ---------------------                                                                                       மாப்பிளை சம்பா அரிசியை வெறும் வாணலியில் வறுத்து, மிக்ஸியில் ஒன்றிரண்டாகப் பொடித்து, 3 1/2 கப் நீர் சேர்த்து குக்கரில் போட்டு 1 மணிநேரம் ஊறியபின் சிறிது உப்பு போட்டுக் கிளறி அடுப்பில் வைத்து மூடி வெயிட் போட்டு ஒரு பிரஷர் வந்ததும், அடுப்பைக் குறைத்து, மூன்று நிமிடங்கள் பொலிய விட்டு அடுப்பை அணைக்கவும்.                                              குக்கரில்  அரிசி வெந்து கொண்டிருக்கும் போதே இன்னொரு பர்னரில்  வாணலியில் எண்ணெய் காயவைத்து கடுகு,உளுந்தம் பருப்பு தாளித்து, பச்சை மிளகாய், தக்காளித் துண்டுகள், மெலிதாக நறுக்கிய வெங்காயம், விரும்பினால் 1 டீஸ்பூன் இஞ்சித் துருவல் சேர்த்து  வதக்கி ,புதினா , மல்லி சேர்த்து  நன்கு பொன்னிறமாக வதங்கியதும் துண்டுகளாக நறுக்கிய காய்கறிகள் சேர்த்துப் புரட்டி நீரும் உப்பும் சேர்த்து வெந்து நீர் வற்றியதும்,  குக்கரில் வெந்திருக்கும் அரிசிக் கலவையைச் சேர்த்து  நெய்விட்டு நன்கு  கிளறி பொலபொலப்பாக இறக்கவும்.

மிகச் சிறப்பான, சத்தும், சுவையும்  நிறைய காலை மற்றும் இரவு நேர உணவு. அனைவருக்கும் ஏற்ற நார்ச்சத்து, புரதம், தாதுப் பொருட்கள்  நிரம்பியது. சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்தது. 


 

செவ்வாய், 1 செப்டம்பர், 2020

கறிவடாம் குழம்பு

                        கறிவடாம் குழம்பு
                        *******************
தேவை :
-------------
              சின்ன வெங்காயம் ----- 1 கைப்பிடி,
                பூண்டு பற்கள்-----           6,
                  தக்காளி    -------               1,
                   புளி ----------               சின்ன எலுமிச்சையளவு ,
                     கறி வடாம் ( சின்ன சைஸ்) ----- 2,
                      மிளகாய்த்தூள் -----------     1/2 டீஸ்பூன்,
                        மல்லித்தூள் -------              1 டீஸ்பூன்,
                          சீரகத் தூள் --------               1/2 டீஸ்பூன்,
                           மஞ்சள் தூள் -------              1/2 டீஸ்பூன்                                        கறிவேப்பிலை ----               1 ஆர்க்கு,
                             மல்லித்தழை  --------            சிறிது,
                             உப்பு, எண்ணெய் ------ தேவைக்கு.
செய்முறை :
--------------------
             வாணலியில் எண்ணெய் காயவைத்து, கறிவடாம்களை உதிர்த்து விட்டு நன்கு பொரித்து எடுக்கவும். அதே வாணலியில் எண்ணெய் விட்டு, கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும், உரித்த வெங்காயம், பூண்டு ,தக்காளித் துண்டுகள் சேர்த்து, பொன்னிறமாக வதங்கியதும், புளி கரைத்த நீர் விட்டு, மஞ்சள் தூள், மல்லித்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், உப்பு மல்லித்தழை சேர்த்து நன்கு கொதித்து, குழம்பு நல்ல மணம், நிறத்தோடு எண்ணெய் பிரியும் தருணத்தில், பொரித்து வைத்திருக்கும் கருவடாம்  சேர்த்துக்  கிளறி இறக்கவும்.  
                  சூடான சாதத்தோடு பிசைந்து சாப்பிட மிகுந்த சுவையாக இருக்கும்.
                          
     



 

ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2020

சேனைக்கிழங்கு குழம்பு


                 சேனைக்கிழங்கு குழம்பு                           +++++++++++++++++++++++++++               தேவை :

--------------------------------
                    சேனைக்கிழங்கு துண்டுகள் ( தோல் நீக்கி) --- 1கப்,
                      சின்ன வெங்காயம்  ---- 10,
                       பூண்டு பற்கள் -----             6,
                       பச்சை மிளகாய்  -----          2,
                       தக்காளி  --------                      1, 
                        புளி ----------                             சின்ன எலுமிச்சை அளவு,
                         மஞ்சள் பொடி  ,மிளகாய்ப் பொடி, மல்லிப்பொடி, சீரகப்பொடி  ,
                            கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, மல்லி, புதினா ,                                      உப்பு, எண்ணெய் ------தேவைக்கு,
                            முற்றிய தேங்காய் மூடி ------ 1.

    செய்முறை :

--------------------------------
                              சேனைக்கிழங்கு துண்டுகளை  மஞ்சள் பொடி, மோர் ,உப்பு கலந்த நீரில் போட்டு அரை வேக்காடு வேகவைத்து, நீர் வடித்து உலர விடவும். மிக்ஸி ஜாரில் தக்காளி துண்டுகளை அரைத்து, அத்துடன்  உரித்த வெங்காயம், பூண்டை ஒன்றிரண்டாக. உடைத்த பின் புதினா சேர்த்து சுற்றி  எடுக்கவும். 
                                    வாணலியில் சிறிது எண்ணெய் காயவைத்து, உலர்ந்த சேனைக்கிழங்கு துண்டுகளை மிதமான தணலில் பொரித்து எடுத்து வைக்கவும்.  அதே எண்ணெயில் கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை, பச்சை மிளகாய் தாளித்து,  அரைத்த கலவை சேர்த்துப் பொன்னிறமாகும் வரை வதக்கி,  புளி கரைத்த நீர் விட்டு, மஞ்சள் பொடி, அரை டீஸ்பூன் மிளகாய் பொடி, ஒரு டீஸ்பூன் மல்லிப்பொடி, அரை டீஸ்பூன் சீரகப்பொடி, சிறிது உப்பு சேர்த்துக் கொதிக்க ஆரம்பித்ததும் பொரித்த கிழங்குத் துண்டுகள் சேர்த்து இரண்டு நிமிடங்கள் கொதித்து குழம்பு வற்றியதும், தேங்காய் அரைத்து எடுத்த பாலைச் சேர்த்துப் பொங்கியதும் இறக்கிப் பரிமாறவும்.
                 சூடான சாதத்தோடு பிசைந்து சாப்பிட மிகுந்த சுவையாக. இருக்கும்.

கம்பு புட்டு


            

                             கம்பு புட்டு

                                                    *********************************

தேவை:

----------------------

                        உமி நீக்கிய கம்பு ------ 1கப்,

                       பொடித்த வெல்லம் ------ 3/4 கப்,

                         வெள்ளை எள்ளு ------  1/2 கப்,

                          தேங்காய்ப் பூ -------  2 டேபிள்ஸ்பூன்,

                             ஏலக்காய்  ------- 6 ,

                            நெய் -------- 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை :

-----------------------------

                             கம்பை வெறும் வாணலியில் வாசம் வர சிவக்க வறுத்து, மிக்ஸியில் நைசாகப் பொடித்தபின், உப்பு கலந்த நீர் சேர்த்து, உதிரியாகக்  கட்டிகளின்றிப்   பிசிறிப் பிசைந்து மூடி வைக்கவும். குறைந்தது அரை மணிக்குப் பின் ஆவியில் வேகவிடவும். வெல்லத்தைக் கொதிக்கும் நீரில் கரைத்து வடிகட்டி தேங்காய்ப் பூ சேர்த்து பாகு வைக்கவும்.  வெந்த புட்டை வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி, ஏலப்பொடி, முன்னதாக வறுத்து ஒன்றிரண்டாகப் பொடித்த எள்ளு, நெய் சேர்த்து கலக்கி வெல்லப்பாகையும் சேர்த்து நன்கு கிளறி விடவும். அடுப்பில் வைக்க வேண்டாம்.

இந்த புட்டு மிகவும் சுவையானது. சத்தானது. செய்வதற்கு சுலபமானது. 

                                                          

                                              

தினை கஞ்சி


                            தினை கஞ்சி

                         --------------------------

செய்முறை :
-------------------
                  1 கப்  உமி நீக்கிய தினையோடு நாலு கப் நீரும், உரித்த பூண்டு பற்கள் நாலும் 
, உப்பும் சேர்த்து குக்கரில் போட்டு, ஒரு பிரஷர் வந்ததும் அடுப்பை குறைத்து, 3 நிமிடத்துக்குப் பின் அடுப்பை அணைத்து, பிரஷர் தணிந்ததும் திறந்து  குழைய வெந்திருக்கும் கலவையை மசித்து, தேவைப்பட்டால் நீர் விட்டு அடுப்பில் வைத்துக் கொதித்ததும், 1 கப் திக்கான தேங்காய்ப் பால் சேர்த்துப் பொங்கியதும் இறக்கவும்.

நார்ச்சத்து நிரம்பிய இந்த கஞ்சி சுவையானது. அனைவருக்கும் ஏற்றது. காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். 

சனி, 29 ஆகஸ்ட், 2020

ராகி கீரை வடை


                                                     ராகி கீரை வடை
                         ********************
 தேவை :
---------------
                முழு கேழ்வரகு (ராகி)  ------- 1கப்,
                 ஆய்ந்த முருங்கைக் கீரை  ---- 1 கைப்பிடி, 
                 பொடியாக நறுக்கிய வெங்காயம் -- 
                                                                     1 டேபிள்ஸ்பூன்,
                   பச்சை மிளகாய் ( துண்டுகளாக) ----- 2,
                     உப்பு,எண்ணெய்  ---- தேவைக்கு.
செய்முறை :
---------------------
                     கேழ்வரகை மிக்ஸியில் அரைத்து  நைசான மாவாக்கி, கீரை,வெங்காயம்,  பச்சை மிளகாய் , விரும்பினால் 1 டீஸ்பூன் சோம்பு சேர்த்து மாவோடு கலக்கி  ,உப்பு கலந்த நீர் விட்டுப் பிசைந்து 1/4 மணி  நேரம் ஊறவிட்டபின், காய்ந்த எண்ணெயில் வடைகளாகத் தட்டிப்போட்டு, இருபுறமும் முறுகலாக வேகவிட்டு எடுக்கவும்.

சூடாக இந்த கிரிஸ்பி வடை சுவை  அள்ளும். கடையில் கிடைக்கும் மாவிலும் செய்யலாம். மொறுமொறுப்பு சற்று குறைவாக இருக்கும்.

         

                                           


     

வெள்ளி, 28 ஆகஸ்ட், 2020

காட்டு யானம் கஞ்சி

                   காட்டு யானம் கஞ்சி

                                  ++++++++++++++++++++++++++++++++++++++++++
செய்முறை :
-------------------
             காட்டு யானம் என்பது நமது பாரம்பரிய அரிசி. இந்த அரிசிச்சாதம் சாப்பிடுவோருக்கு  ஒரு காட்டு யானையைத்  தாங்கும் அளவுக்கு  உடம்பு வலுவாக இருக்குமாம். நோய் எதிர்ப்புச் சக்தி அதிகமாக இருக்குமாம். தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் சர்க்கரை நோய்  காணாமலே போய் விடும் என்கிறார்கள்.

                ஒரு  கப் காட்டுயானம் அரிசியை நீர் விட்டுக் களைந்த பின்,  8 கப் நீர் சேர்த்து , குக்கரில் ஊறவிட்டு,
குறைந்தது 3 மணி நேரம் ஊறிய பின், உப்பு சேர்த்து பிரஷரில் வேகவிடவும். ஒரு பிரஷர் வந்ததும், அடுப்பைக் குறைத்து வைத்து 20 நிமிடங்கள் பொலிய விட்டு, அடுப்பை அணைக்கவும்.

வெந்த அரிசி அவல் போல மலர்ந்திருக்கும். சாதாரணமாக தேங்காய்ப்பூ, சர்க்கரை சேர்த்தோ, தித்திப்புக்குப் பதிலாக மிளகுத் தூள் போல விருப்பத்திற்கு ஏற்ப கலந்து ,இரவு  உணவாக திரவ நிலையில் சாப்பிடலாம். அல்லது,

சமைத்து இறக்கிய கஞ்சியில் நாலு ஆர்க்கு கறிவேப்பிலை போட்டுக் கலந்து மூடி வைத்து இரவெல்லாம் ஊறிய பின், மறுநாள் காலையில் நன்கு கரைத்து, விரும்பினால் மோர் சேர்த்து, நீராகாரமாக, காலை உணவாகச் சாப்பிடலாம். 

குறிப்பாக இந்த முறை சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் உகந்ததாகும்.  அனைவருக்கும் ஜீரணசக்தியை அதிகரிக்கும். 

இந்த சமையலில் முக்கியமான ஒன்று என்னவெனில், இந்த காட்டு யானம் கஞ்சியை மண் கலயத்தில் சமைப்பது கூடுதல் சிறப்பு. நற்பலன்கள் மிக அதிகம்! 
 

வியாழன், 27 ஆகஸ்ட், 2020

நெய் மாலாடு


                            நெய் மாலாடு

                                                  **********************************************

தேவை :
--------------
             முழு கோதுமை      ----   1 கப்,
                     பாசிப்பருப்பு         -------  1/2 கப்,
               தினை                     -------    1/2 கப்,
              சர்க்கரை                 ------       2 கப்,
               வெண்ணெய்       -------     250 கிராம் 
செய்முறை :
--------------------
                  கோதுமை, பாசிப்பருப்பு, தினை ஆகியவற்றை வெறும் வாணலியில் சிவக்க வறுத்து, ஆறவிட்டு மிக்ஸியில் நைசாக அரைக்கவும். சர்க்கரையையும் நைசாக அரைத்து அனைத்தையும் ஒன்றாக நன்கு கலக்கவும்.
விரும்பினால் முந்திரிப் பருப்பு, ஏலப்பொடி சேர்க்கலாம். 
வெண்ணெயை நெய்யாக உருக்கி மாவில் கலந்து, கை பொறுக்கும் சூட்டில் இறுகலான உருண்டைகளாகப் பிடிக்கவும்.( சூடான நெய்தான் நல்ல பக்குவம் கொடுக்கும் என்பதாலேயே வெண்ணெயை உருக்கிய
சூட்டோடு கலந்தால்  நல்லது)
இந்த மாலாடு சுவையானது. சத்து நிறைந்தது.  சில நாட்கள்  ஆனாலும் கெட்டுப் போகாது.



                 
     


செவ்வாய், 25 ஆகஸ்ட், 2020

கவுனி கஞ்சி

                               கவுனி கஞ்சி

                             *******************

    செய்முறை :

                     1/2 கப்  கவுனி அரிசியை  ( கறுப்பு அரிசி) மிக்ஸியில் குருணையாகப் பொடித்து குக்கரில் போட்டு, 4 கப் நீரும் உப்பும் சேர்த்துக் கரைத்து அடுப்பில் வைத்து,  ஒரு பிரஷர் வந்ததும், அடுப்பைக் குறைத்து,
6 ,7, நிமிடங்கள் பின்பு அடுப்பை அணைத்து, பிரஷர் தணிந்ததும் திறந்து கஞ்சி கெட்டியாக இருந்தால் வெந்நீர் கொதிக்க வைத்து, தேவைப்படும் அளவிற்கு ஊற்றி,ஆற விட்டு  பருகலாம். 

தொட்டுக்கொள்ள வேண்டுமென்றால் காரத்துவையல்கள், ஊறுகாய், மோர்மிளகாய் போன்றவற்றில் ஏதோ ஒன்று எடுத்துக் கொள்ளலாம்.

கவுனி அரிசி மாவுச்சத்து  குறைவாகவும் ,நார்ச்சத்து அதிகமாகவும் உள்ளதால் அனைவருக்கும் ஏற்றது. உடலுக்கு தீங்கு செய்யாதது.எளிமையான உணவு. எளிதில் ஜீரணமாவது.
இந்த அற்புதமான அரிசியில் பலவகை பதார்த்தங்கள் தயாரிக்கலாம். 

 

 

திங்கள், 24 ஆகஸ்ட், 2020

சுண்டைக்காய் காரக் குழம்பு

     

                 சுண்டைக்காய் காரக் குழம்பு

        *************************************

             தேவை:

                          ஆய்ந்த சுண்டைக்காய் - 2 கப்,

                                     சின்ன வெங்காயம் -     1 கைப்பிடி,

                                     பூண்டு பற்கள் ------ 6,

                                        தக்காளி        ------  2,

                                         புளி   -----   சின்ன எலுமிச்சை அளவு

                                           மிளகாய்த்தூள் --- 3/4. டீஸ்பூன்,

                                          மல்லித்தூள் ------   1 டீஸ்பூன்,

                                           மஞ்சள் தூள்   ---- 1/2 டீஸ்பூன்,

                                           கெட்டித்தயிர் ------ 1 டேபிள்ஸ்பூன்,

                                           உப்பு,எண்ணெய் --- தேவைக்கு,

              தாளிக்க: கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை

            செய்முறை :

                             நன்கு அலசி நீர் வடித்த சுண்டைக்காயை மஞ்சள் தூள் ,உப்பு சேர்த்து எண்ணெய் விட்டு வதக்கி வைக்கவும்.  உரித்த வெங்காயம், பூண்டு பற்கள் தக்காளி துண்டுகளை மிக்ஸி ஜாரில் நீர் சேர்க்காமல் ஒன்றிரண்டாகச் சுற்றி எடுத்து, வாணலியில் எண்ணெய் காயவைத்து, கடுகு, உளுந்தம்பருப்பு, கறிவேப்பிலை தாளித்து, பொடித்த கலவை சேர்த்து நன்கு வாசம் வர வதக்கி சுருளும்  போது வதங்கிய சுண்டைக்காயோடு  சேர்த்து புளி நீர் விட்டு மிளகாய்த்தூள் ,மல்லித்தூள், 1/2 ஸ்பூன் சீரகத்தூள்,மல்லித்தழை ,போதுமான நீர் சேர்த்துக் கொதிக்கும் போது, ஒரு டீஸ்பூன் வெல்லத்தூள், தயிர் சேர்த்து, குழம்பு  நல்ல நிறமும், மணமுமாகத் திக்காகி, எண்ணெய் பிரியும் போது இறக்கி சூடான சாதத்தோடு பிசைந்து சாப்பிட மிகுந்த சுவையாக இருக்கும். 

      வித்தியாசமான பக்குவத்தில் அசத்தும் காரக்குழம்பு. 

          

                         

                  

         

சனி, 22 ஆகஸ்ட், 2020

கோவா கேசரி

             கோவா கேசரி 
           *********************
தேவை 
----------------
வெள்ளை ரவை ------ 1கப்,
பால் ------ 3/4 லிட்டர்,
சர்க்கரை  ---- 2 கப்,
நெய் ----  200 கிராம் ,
கடலை மாவு -- 2 டேபிள்ஸ்பூன்
ஏலக்காய் --- 6 ,
முந்திரி ,திராட்சை ---- தலா 20 கிராம்.

செய்முறை :
----------------------
1 கப் காய்ச்சிய பாலுடன் இரண்டு கப் தண்ணீர் சேர்த்து, ரவையைச் சேர்த்து கட்டி விழாமல் கரைத்து வைத்து 1 மணி நேரம் ஊறவிடவும்.

மீதி பாலை சுண்ட காய்ச்சி இறக்கவும். கோவா போல் திக்காக இருக்கட்டும்.

ஊறிய ரவையை அடுப்பில் வைத்துக் கிண்டவும்.இன்னொரு அடுப்பில் கடலைமாவோடு நெய் சேர்த்துத் தளர்ச்சியாக வறுத்து ரவையோடு சேர்க்கவும்.  காய்ச்சிய பால்கோவாவைச் சேர்த்து, ரவை நன்கு வெந்ததும் சர்க்கரை சேர்த்துக் கிளறவும்.  நெய் சிறிது சிறிதாகச் சேர்த்து ,ஏலப்பொடி போட்டு சுருண்டு, நெய் பிரிய ஆரம்பித்ததும் வறுத்த முந்திரி, திராட்சை சேர்த்து இறக்கவும். 


வெள்ளி, 31 ஜூலை, 2020

மஞ்சள்பூசனி அல்வா





மஞ்சள் பூசனி அல்வா 
*************************
தேவை
-------------
மஞ்சள் பூசனி ( பரங்கிக்காய் ) துருவல்  ----- 2 கப்,
கோதுமை மாவு --- 2 டேபிள்ஸ்பூன்,.
ஆர்கானிக் நாட்டுச்சர்க்கரை -   3/4 கப்,
வெள்ளை சர்க்கரை ---- 1/4 கப்,
பால் --- 1 கப், 
நெய் ---- 1/2 கப்,
முந்திரிப்பருப்பு -- 20 கிராம்,
ஏலக்காய்  ---- 6.

செய்முறை
------------------
முந்திரிப்பருப்பை வாணலியில் நெய் விட்டு வறுத்து எடுத்து வைக்கவும். 

அந்த வாணலியில், மிக்ஸியில் மசித்தெடுத்த பரங்கிக்காய் சேர்த்து பாலைச் சிறிது சிறிதாகச் சேர்த்துக் கிளறவும்.  இன்னொரு வாணலியில் கோதுமை மாவை நெய் சேர்த்து தளர்ச்சியாக வாசம் வர வறுத்து பரங்கிக்காய் கலவையில் சேர்த்து கிளறவும். நன்கு திரண்டு வரும்போது, நாட்டுச் சர்க்கரை, வெள்ளை சர்க்கரை சேர்த்து நன்கு கரைந்ததும் ,இரண்டு டேபிள்ஸ்பூன்  ரீஃபைண்ட்  ஆயில்  விட்டு, சிறிது, சிறிதாக நெய் சேர்த்து கைவிடாமல் கிளறி, ஏலப்பொடி சேர்த்து, பாத்திரத்தில் ஒட்டாமல்  திரண்டபின், மேலும் கிளறி, முந்திரிப் பருப்பு சேர்த்து நெய் பிரிந்தபின் இறக்கி வேறு டிரேயில்  கொட்டிப் பரப்பவும்.

கலர் சேர்க்கத் தேவையில்லை. அபார சுவை கொண்டது.   





திங்கள், 27 ஜூலை, 2020

ரவா பொங்கல்



ரவா பொங்கல்
------------------------------
தேவை
----------------
வெள்ளை ரவை ---- 1 கப்,
பாசிப்பருப்பு  ----  1/2 கப்,
நெய் --- 1/4. கப்,
                                     :மிளகு , சீரகம்,--- தலா 1/2 டீஸ்பூன்,                                     கறிவேப்பிலை --- 1:ஆர்க்கு, உப்பு  --- தேவைக்கு

செய்முறை
----------------------------
பாசிப்பருப்பை வறுத்து, நீர் விட்டு கரையும் வரை வேகவிடவும். உப்பு போடவும் அடுப்பைக் குறைத்து  வைத்து  ,வறுத்த ரவையை அந்தக் கரைசலில் கட்டிப்படாமல் தூவிக் கிளறவும்.  நெய்யில் மிளகு, சீரகம், கறிவேப்பிலை பொரித்துக் கொட்டி மேலும் நெய் விட்டு கிளறி , சற்று  தளர்ச்சியாக. இறக்கி, விரும்பினால் முந்திரிப் பருப்பு  வறுத்துப் போட்டு தேங்காய் சட்னி, மல்லி சட்னி போன்றவற்றோடு பரிமாறவும்! 
                 

வெள்ளி, 24 ஜூலை, 2020

தக்காளி சட்னி



தக்காளி சட்னி 
*******************

தேவை 
-------------
தக்காளி ---- 2,
பெரிய வெங்காயம் ---- 1,
பூண்டு பற்கள் ----- 6,
மிளகாய் வற்றல் --- 4,
உப்பு, எண்ணெய் --- தேவைக்கு

செய்முறை
--------------------
வெங்காயம், தக்காளிகளை நறுக்கி சிறிது எண்ணெய் சேர்த்து மிதமான தணலில் வதக்கி ,பூண்டு பற்கள் மெலிதாக நறுக்கிப் போட்டு ஆறவிடவும். ( பூண்டை  வதக்க வேண்டாம்)  
மிக்ஸி ஜாரில் மிளகாய் வற்றல் உப்பு சேர்த்து சிறிது நீர் விட்டு நைசாக அரைத்ததும், வதங்கிய பொருட்கள் சேர்த்து சட்னியாக அரைத்து எடுக்கவும்.

நல்லெண்ணெய் ஒரு டேபிள்ஸ்பூன் காயவைத்து,  கடுகு, உளுந்தம் பருப்பு கறிவேப்பிலை தாளித்துக் கொட்டிக் கிளறி விடவும். இட்லி, தோசைக்கு பொருத்தமான, வழக்கமாக அனைவரும் தயாரிக்கும் சட்னி தான் இது.

வியாழன், 23 ஜூலை, 2020

முருங்கைக் கீரை பருப்பு மசியல்

முருங்கைக்கீரை பருப்பு மசியல்
-----------------------------------------------------------
தேவை :
--------------
ஆய்ந்த முருங்கைக் கீரை ---  2.கைப்பிடி,
துவரம் பருப்பு  -- 1/4 கப்
பூண்டு பற்கள் - 4,
மிளகாய்த் தூள் -- 1/4 டீஸ்பூன், 
உப்பு, எண்ணெய் - தேவைக்கு 

செய்முறை :
துவரம் பருப்பை நீரில் போட்டு பூண்டு பற்கள், மஞ்சள் தூள் போட்டு மலர வேகவிடவும்.

முருங்கைக் கீரையை சிறிது எண்ணெய் சேர்த்து வதக்கியபின் மிளகாய்த் தூள், விரும்பினால் ஒரு பச்சை மிளகாய் நறுக்கிப் போட்டு நீர் சேர்த்து வெந்தபின், நீர் வற்றியதும் நன்கு மசித்து, அல்லது மிக்ஸியில் சுற்றி வெந்த பருப்போடு சேர்த்து நன்கு கிளறி, கடுகு உளுந்தப் பருப்பு தாளித்துக் கொட்டி, சூடான சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம்.

ஞாயிறு, 19 ஜூலை, 2020

பீட்ரூட் சட்னி



பீட்ரூட் சட்னி
****************
தேவை
-------------
பீட்ரூட் துருவல்  ---- 1/2 கப்,
தேங்காய்த் துருவல்   ------ 1 டேபிள்ஸ்பூன்,
தக்காளி -- 1
உரித்த சின்ன வெங்காயம் --- 4 ,
பூண்டு பற்கள்  ----- 4,
பச்சை மிளகாய் ---- 2,
கறிவேப்பிலை ---- 1ஆர்க்கு
எண்ணெய், உப்பு ---- தேவைக்கு

செய்முறை
--------------------
வாணலியில் எண்ணெய் காயவைத்து கறிவேப்பிலை போட்டு பொரிந்ததும் தேங்காய்ப்பூ சேர்த்து வறுத்து, அத்துடன் தக்காளி வெங்காயம், பூண்டு பற்கள் சேர்த்து பீட்ரூட் துருவலோடு வதக்கி உப்பு சேர்த்து அரைக்கவும்.  காரம் தூக்கலாக வேண்டுமென்றால் சிறிது மிளகாய்ப் பொடி சேர்க்கலாம்.

 இட்லி ,தோசை பொங்கலுக்கு சூப்பர் டேஸ்டி சட்னி! . 

சனி, 4 ஜூலை, 2020

முருங்கைக் கீரை குழம்பு



முருங்கைக் கீரை குழம்பு
*******************************
தேவை
-------------
ஆய்ந்த முருங்கைக் கீரை ---- 2 கைப்பிடி
துவரம்பருப்பு ---- 1/2 கப்
புளி --- சின்ன எலுமிச்சை அளவு 
பூண்டு பற்கள் --  6
சாம்பார் பொடி --- 1 டீஸ்பூன்
மஞ்சள் பொடி --- 1/2 டீஸ்பூன்
குழம்புவடகம் ---- சின்ன சைஸ் 2
உப்பு எண்ணெய் --- தேவைக்கு

செய்முறை :
-----------------
துவரம் பருப்புடன் மஞ்சள் பொடி, பூண்டு பற்கள் சேர்த்து நீர் விட்டு மலர வேகவைக்கவும். வெந்த பருப்பை கடைந்து விட்டு அடுப்பில் வைத்து சாம்பார் பொடி, புளி கரைத்த நீர் உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும் வரை கொதித்ததும், கீரையுடன் இரண்டு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வதக்கி குழம்பில் சேர்த்துக் கிளறவும். 2 டீஸ்பூன் கார்ன் ஃப்ளோர் நீரில் கரைத்து விடவும்.. குழம்பு திக்கானதும் குழம்புவடகம் எண்ணெயில் பொரித்துப் போட்டு  இறக்கி சூடான சாதத்தோடு பரிமாறவும். சுவையும்,மணமும் அபாரம்! 

பிதுக்கம் பருப்பு கறி



பிதுக்கம் பருப்பு கறி
**************************
தேவை : 
---------------
மொச்சைக்கொட்டை ---- 1கப்,
பெரிய வெங்காயம் --- 1 (சின்ன சைஸ்)
தக்காளி ---- 1
மிளகாய்த்தூள் ,மல்லித்தூள், சீரகத்தூள் - தலா 1/2 டீஸ்பூன்,
மஞ்சள் தூள் -  1/4 டீஸ்பூன்,
தேங்காய்ப்பூ ---- 1 டேபிள்ஸ்பூன்,
எண்ணெய், உப்பு --- தேவைக்கு.

செய்முறை
--------------------
மொச்சைக்கொட்டையை முதல் நாள் இரவே ஊறப்போட்டு மறுநாள் காலை பிதுக்கி பருப்பை மட்டும் எடுத்து வைக்கவும். 
வாணலியில்  எண்ணெய் காயவைத்து, கடுகு, உளுந்தம் பருப்பு, கறிவேப்பிலை தாளித்து மெலிதாக நறுக்கிய வெங்காயம், தக்காளிதுண்டுகள் 2 கீறிய பச்சை மிளகாய்கள் போட்டு வதக்கி, மொச்சைபருப்பு சேர்த்து நீர் விட்டு உப்பு, மஞ்சள் பொடி, மிளகாய், மல்லி, சீரகத் தூள்கள் போட்டுக் கிளறி வேகவிட்டு, அரைத்த தேங்காய் விழுது சேர்த்துத் தளர்ச்சியாகக் கிளறி இறக் கிக் கொத்தமல்லி இலைகள் தூவிப் பரிமாறவும்.

சூடான சாதத்தோடு பிசைந்து சாப்பிடலாம். குழம்பு சாதம், ரசம் சாதத்தோடு சாப்பிடலாம். சப்பாத்திக்கு சைட் டிஷ் ஆகவும் சாப்பிடலாம்.

வெள்ளி, 3 ஜூலை, 2020

பீட்ரூட் பர்பி



பீட்ரூட் பர்பி
*****************

தேவை
---------------
பீட்ரூட் துருவல் --- 1 கப்,
சர்க்கரை  ---- 1 1/2. கப்,
கடலை மாவு  ---- 1/2 கப் 
நெய் --- 100 கிராம் 
ஏலக்காய் --- 6

செய்முறை
****************
பீட்ரூட் துருவலை மிக்ஸியில் போட்டு இரண்டு சுற்று சுற்றி வாணலியில் போட்டு வேகவிடவும். 
கடலை மாவை நெய் சேர்த்து வாசம் வரும் வரை தளர்ச்சியாக வறுத்து வைக்கவும். 
வெந்த பீட்ரூட் டோடு சர்க்கரை சேர்த்து கரைந்து கொதிக்கும் போது ஏலப்பொடி நெய் சேர்த்து கிளறி,  வறுத்த கடலைமாவு சேர்த்து, விரும்பினால் முந்திரித் துண்டுகள் நெய்யில் வறுத்துப் போட்டு பாத்திரத்தில் ஒட்டாமல் நெய் பிரியும் தருணத்தில், நெய் தடவிய டிரேயில் கொட்டிப் பரப்பி துண்டுகள் போடவும்! 

பேசன் பர்பி



பேசன் பர்பி
****************
தேவை
-------------
கடலை மாவு ---- 1 கப்,
சர்க்கரை ---- 3 கப்,
நெய் ----- 2 கப் .

செய்முறை 
------------------
கடலை மாவுடன் 1 கப் நெய் சேர்த்து வாசம் வரும் வரை வறுக்கவும்.. வேறு வாணலியில் சர்க்கரை மூழ்கும் வரை நீர் விட்டு கரைந்து, கொதித்து  மெல்லிய கம்பிப் பதம் வந்ததும் கடலை மாவைச் சேர்த்து கிளறவும். எல்லா நெய்யையும் ஊற்றிக் கிளறி கலவை திரண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும்போது நெய் தடவிய தட்டில் கொட்டிப் பரப்பி துண்டு போடவும். 
நாக்கில் பட்டதும் கரையும் அபார சுவை மிக்க பர்பி. 

சனி, 27 ஜூன், 2020

ஜிஞ்சர் பால்ஸ்



ஜிஞ்சர் பால்ஸ்
------------------------------
தேவை
------------
இஞ்சி  ---- 100 கிராம்,
வெல்லம் ------ 250 கிராம்,
நெய் ----- 2 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய் ---- 5

செய்முறை
--------------------
இஞ்சியைத் தோல் நீக்கி சிறு துண்டுகளாக்கி சிறிது நீர் சேர்த்து அரைக்கவும்.வெல்லத்தை கொதிக்கும் நீரில் கரைத்து வடிகட்டி பாகு உருட்டுப் பதம் வரும் போது இஞ்சி விழுது, நெய் சேர்த்துக்  கிளறி ஏலப்பொடி சேர்த்து சுருண்டு வரும்போது இறக்கி வேறு டிரேயில் மாற்றி, பொறுக்கும் சிறு உருண்டைகளாக உருட்டவும்..
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பும் இந்தப் பதார்த்தம் சுவையானது, ஜீரணசக்தியைத் தூண்டுவது.

சனி, 20 ஜூன், 2020

எள்ளுப்பணியாரம்


எள்ளுப்பணியாரம்
----------------------------------
தேவை:
--------------

பச்சரிசி, புழுங்கலரிசி --- தலா 1/2 கப்,
ஜவ்வரிசி  ---- 1/4 கப்,
வெள்ளை எள்ளு ---- 50 கிராம், பொடித்த வெல்லம் --- 1கப்,
தேங்காய்ப்பூ --- 1 டேபிள்ஸ்பூன்,
ஏலக்காய் --- 5,
உப்பு, எண்ணெய் ---- தேவைக்கு.

செய்முறை :
----------------------

பச்சரிசி புழுங்கலரியை ஒன்றாகவும் ,ஜவ்வரிசியைத் தனியாகவும் ஊறப்போடவும். ஊறிய அரிசிகளைச் சிறிது உப்பு சேர்த்து அரைக்கவும்.இட்லிமாவு பதத்திற்கு எடுக்கும் முன்பு ஜவ்வரிசியும் சேர்த்து அரைத்து எடுக்கவும். 

எள்ளை வறுத்துப் பொடிக்கவும். வெல்லத்தை கொதிக்கும் கரைத்து வடிகட்டி தேங்காய்ப்பூ சேர்த்து அடுப்பில் வைத்துக் கிளறி  பாகாக முதிரும் போது இறக்கி எள்ளுப்பொடி சேர்த்துக் கிளறியபின்,  காய்ந்த பணியாரக் கல்லின் குழிகளில் எண்ணெய் விட்டு, தோசைமாவு பதத்துக்குக் கரைத்த மாவு சிறிது ஊற்றி நடுவில் எள்ளுப் பூர்ணம் வைத்து, மறுபடி மேலே மாவு ஊற்றி  வெந்ததும் திருப்பி விட்டு சிவக்க வெந்து எடுக்கவும்.

மிகுந்த சுவையான இந்த பணியாரம் சத்து நிறைந்தது. அனைவரும் விரும்புவர்.